Thursday, March 31, 2011

தமிழகத்தில் ஒரு பழங்கால மம்மி


பண்டையகாலத்தில், எகிப்தில், இறந்த அரசகுடும்பத்தினரின் உடல்களைப் பாடம் செய்து, பிரமிடுகளில் புதைத்து வைப்பது வழக்கம் என்று பல புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். இப்படிச் செய்ததன் நோக்கம், கடவுள்களாகக் கருதப்பட்ட மன்னர்கள், மீண்டும் சொர்க்கத்திலிருந்து திரும்ப வருகையில், அவர்களுடைய பழைய உடைமைகளைத் திரும்ப உபயோகித்துக்கொள்ளலாம் என்பதே (இதன் காரணமாக, சில சமயம், அரசர்களின் வேலைக்காரர்களும் மனைவிகளும், மம்மிகளுடனே புதைக்கப்பட்டது ஒரு சோக வரலாறு). மிகச்சில நாகரீகங்களில் மட்டுமே இந்தப் பாடம் செய்து புதைக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படியிருக்க, நமது இந்தியாவிலும் ஒருசில மம்மிகள் இருக்கின்றன என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

புனித தாமஸ் பற்றி இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஏசுபிரானின் பிரதம சீடர்களுள் ஒருவராக இருந்த தாமஸ், கி.பி ஐம்பத்திரண்டில் இந்தியா வந்து, சென்னையில் ஒரு தேவாலயத்தைக் கட்ட, அவரது புகழ் பரவுவதை விரும்பாத சில விஷமிகளால், ஈட்டியால் குத்தப்பட்டு கி.பி எழுபத்திரண்டில் மரணமடைந்தார். மரணமடைந்த இடமே, புனித தாமஸ் மலை (செய்ன்ட்  தாமஸ் மௌன்ட்) என்று அழைக்கப்படுகிறது.  அவரது உடல், சான்தொமேயில் உள்ள செய்ன்ட் தாமஸ் பஸிலிகாவில் புதைக்கப்பட்டது. இந்த இடத்தில், அவரே கட்டிய ஒரு தேவாலயத்தில்தான் முதலில் புதைக்கப்பட்டது அவரது உடல். அதன்பின், அந்த இடத்தில், செய்ன்ட் தாமஸ் பஸிலிகா கட்டப்பட்டது.

நான் சொல்லப்போகும்  விஷயத்தைப் பற்றிச் சொல்லுமுன், அதையொத்த இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றே புனித தாமஸ் பற்றிச் சொன்னேன். இனி, நாம் வேறொரு விஷயத்துக்குச் செல்லலாம்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகான், ராமானுஜர். வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,  பல விஷயங்களை நிறுவியவர். இன்றும், அவையத்தனையும் அப்படியப்படியே பின்பற்றப்படுகின்றன. வைஷ்ணவத்தின் மிக முக்கிய நபராக இவரைச் சொல்லலாம். இவரது பங்களிப்பே, விஷிஷ்டாத்வைதம் என்ற தத்துவம். இவரது காலம் வரை, அத்வைதமே சனாதன தர்மத்தின் முக்கியக் கோட்பாடாக நிலவி வந்தது. ஆதி சங்கரர்,  ஸ்தாபித்திருந்த தத்துவமான அத்வைதம்,  அவரது காலத்துக்குப் பிறகு, ஆயிரத்தைந்நூறு வருடங்களாக மிகப் பிரபலமாக விளங்கி வந்தது (ஆம். ஆதி சங்கரர்  பிறந்த வருடம், கி.மு 509 என்பது எனது கருத்து. பல்வேறு நபர்களால் சொல்லப்படுவது போல, அது கி.பி 788 அல்ல. இதனைப்பற்றி ஒரு கட்டுரை சீக்கிரம் எழுதுவேன்). ராமானுஜர், அத்வைதத்தைப் பற்றிப் பல கேள்விகள் எழுப்பி, ஸ்தாபித்த ஒரு தத்துவமே இந்த விஷிஷ்டாத்வைதம். (இதற்குப் பிறகு, மத்வாச்சாரியரால் த்வைதம் பிரபலமாக்கப்பட்டது). அதுமட்டுமல்லாது,  ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதபரமான பிரம்ம சூத்ர பாஷ்யம், மிகப்பிரபலமானது (ஸ்ரீபாஷ்யம் என்றே இதற்குப் பெயர் உண்டு).  ராமானுஜர் செய்த பல்வேறு அதிசயங்களைப் பற்றியும் பல கதைகள் நிலவிவருகின்றன. இவர், 120 வருடங்கள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது (கி.பி 1017  முதல் 1137  வரை).

ராமானுஜரின் வாழ்வில் நடந்த ஒரு விஷயம், கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும். திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் பலமுறை சென்று, அவரது பதினெட்டாம் வருகைக்குப் பின், 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்த்ரத்தின் அர்த்தத்தை ,நம்பி, ராமாநுஜரிடம் சொல்ல, உடனே கோயில் கூரையின் மீது ஏறிய ராமானுஜர், அத்தனை மக்களுக்கும் அந்த அர்த்தத்தை சொல்லி, தன்னைத் திட்டிய நம்பியிடம், தான் ஒருவன் நரகத்துக்குச் சென்றால் பரவாயில்லை; இந்த அத்தனை மக்களும் சொர்க்கத்துக்குச் செல்வதே மேல் என்று வாதிட்ட கதை. அதேபோல், யமுனாசார்யரைச் சந்தித்து அவரது அருளைப் பெறப்போன ராமானுஜர், அதற்குச் சற்றுமுன்னர்தான் மோட்சமடைந்த அவரது  கையின் மூன்று விரல்கள் மட்டும் விரிந்திருப்பதைப் பார்த்து, அதற்கு அர்த்தத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல, அந்த விரல்கள் மடங்கிய கதையும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யமுனாசார்யரின் அந்த மூன்று ஆசைகளாவன:

1 . வியாசர் மற்றும் சடகோபரின் பெயர்களை, உலகம் உள்ளமட்டும் பரப்புவது
2 . ப்ரம்மசூத்ரத்துக்கு, விசிஷ்டாத்வைதபரமான பாஷ்யம் எழுதுவது
3 . சரணாகதி தத்துவமே மோட்சத்துக்கான பாதை என்பதை உலகில் பரப்புவது


இந்த மூன்று விஷயங்களையும் செய்துமுடித்தார் ராமானுஜர்.

ராமானுஜருக்கு, அவரது காலத்தில் வாழ்ந்துவந்த குலோத்துங்க சோழனால் ஆபத்து வந்தது என்று சொல்லப்படுகிறது. பரமசைவனான சோழன், வைஷ்ணவரான ராமானுஜரைக் கொல்லத் திட்டமிட, அங்கிருந்து கர்நாடகம் சென்ற ராமானுஜர், அரசன் பிட்டிதேவனின் மகளுக்குப் பிடித்திருந்த பேயை விரட்டியதால், ஜைனனான பிட்டிதேவன், தனது பெயரை, விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக்கொண்டு வைஷ்ணவனாக மாறினான். இதுபோன்ற பல அதிசயங்களை அவரது காலத்தில் ராமானுஜர் நிகழ்த்தினார். இதன்பின் ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், கோயிலின் நிர்வாகத்தைப் பல வருடங்கள் திறம்பட ஆற்றினார்.


இப்போதுதான் இந்தக் கட்டுரையின் முக்கியமான விஷயம் வருகிறது.


ராமானுஜர், தனது நூற்றிஇருபதாம் வயதில் முக்தியடைய, அவரது உடல், ஸ்ரீரங்கம் கோவிலிலேயே புதைக்கப்பட்டது. அந்த இடத்தில், அவரது சிலை ஒன்று தானாகவே எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி எழுந்த அந்தச் சிலை,  அச்சு அசலாக, ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே இருப்பதை, இன்றும் காணமுடியும். அமர்ந்தகோலத்தில், ஆளுயரத்தில் இருக்கும் அந்தச் சிலை, ஒரு கையை ஆசி கூறும் வகையில் வைத்திருக்கிறது. இன்னொரு கையை, பத்மாசனத்தில் இருக்கும் தனது தொடையின்மேல் வைத்திருக்கிறது. அந்தக் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகரிடம், பல வருடங்களுக்கு முந்தைய எனது இந்தியப்பயணத்தின்போது பேச்சுக்கொடுத்தேன். அப்போது அவர் கூறிய விஷயம், மிகவும் அதிசயமானது. இந்தச் சிலைக்கு, வருடத்துக்கு இருமுறை, கற்பூரப்பூச்சு நடக்கும் என்றும், அந்தச் சமயத்தில், சிலையைத் தொட நேரும்போது, அப்படியே ஒரு மனிதஉடலைத்  தொடுவதுபோலவேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்து என்னவெனில், ராமானுஜரின் திருவுடலைத்தான் அந்தச் சிலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதே. ராமானுஜரின் உடலேதான் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானால், அது ஒரு மம்மியாகிறது. இந்திய வரலாற்றில், இறந்த உடல் ஒன்றை இப்படிப் பதப்படுத்தி வைத்திருப்பது அதிசயமா இல்லையா? படிக்கும் நண்பர்கள் சொல்லுங்கள்.


இந்த விஷயத்தைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் சொல்லப்படுவது போல, கற்பனைக்குதிரையின் மீது ஏறி, இன்றைக்கு சுமார் 874 வருடங்களுக்கு முன் செல்வோம்.


ஸ்ரீரங்கம் திருக்கோயில். இரவு வேளை. எங்கெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவிலே ஜெகஜோதியாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் மந்திர ஒலிகள். மறுபக்கம், பரவசமான பக்தர்களின் 'நாராயணா' கோஷம். அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகள், அரச குடும்பத்தினர் ஆகிய அனைத்து முக்கியஸ்தர்களும் ஒருபுறம் நின்றுகொண்டிருக்கின்றனர். அனைவரின் முகத்திலும் சோகம் குடிகொண்டிருக்கிறது. அவர்களுக்கு முன்னர், எம்பெருமானார் யதிராஜர் ராமானுஜரின் திருவுடல் கிடத்தப்பட்டிருக்கிறது. உடலின் பொலிவு, இன்னமும் அடங்கவில்லை. உடலெங்கும் திருமண் தடவப்பட்டு,  ராமானுஜர் உறங்கிக்கொண்டிருப்பதைப் போலவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. சிறிதுநேரம் அனைவரும் கூடிப்பேசியபின், மெதுவாக சிலர் முன்வர, புருஷசூக்தமும், நாராயணசூக்தமும் அனைவராலும் பலத்த குரலில் ஓதப்படுகின்றன. ராமானுஜரின் உடலை, மெதுவாக எடுத்து,  பெருமாளின் வசந்தமண்டபம் இருக்கும் இடத்தில் தோண்டப்பட்டுள்ள குழியில், இறக்குகின்றனர்.  அனைத்து பக்தர்களின் பரவசமான 'நாராயணா' கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கிறது. மெதுவே, அந்தக் குழி மூடப்படுகிறது.


ஒரு திரைப்படத்தின் அட்டகாசமான முதல் ஐந்து நிமிடங்கள், மேலே சொல்லப்பட்ட விஷயத்தில் இருக்கிறது. உண்மையில், ராமானுஜரின் உடல், புதைக்கப்படவில்லை; அதுதான் பதப்படுத்தப்பட்டு,  சிலையைப்போல உட்காரவைக்கப்பட்டிருக்கிறது என்பதே கோயில் அர்ச்சகர் தெரிவித்த உண்மை.


ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் நண்பர்கள், உடையவர் சந்நிதி என்று அழைக்கப்படும் ராமானுஜரின் சந்நிதிக்குச் சென்று பார்க்க வேண்டுகிறேன். அச்சு அசல், ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே விளங்கும் அந்தச் சிலையின் தத்ரூபத்துக்கு இணையே சொல்ல முடியாது. ஆஜானுபாகுவான தோற்றத்தில், பிரகாசமாகப் பளிச்சிடும் கண்களின் உயிர்ப்பு, அட்டகாசம். பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தாலும், அக்காட்சி எனது மனதை விட்டு அகலவில்லை.


ஆகையால், இந்தக் கட்டுரை இத்தோடு முடிவடைகிறது. மீண்டும் ஓரிரு நாட்களில், இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.  
 
பின்குறிப்பு - புகைப்படம் - http://www.ramanuja.org/sv/temples/srirangam/ramanuja-image.html என்ற சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டது
 

Tuesday, March 29, 2011

த்வைதம் - எதுவரை?





மயஸ்கரன் என்ற பெயர்,  ருத்ரத்தின் எட்டாம் அனுவாகத்தில், சிவனின் தனிப்பட்ட பெயர்களைச் சொல்லிக்கொண்டுபோகும்போது வரும் பெயர். இந்த எட்டாம் அனுவாகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதில்தான், பஞ்சாட்சர மந்த்ரமாகிய 'நம சிவாய' என்பது வருகிறது. அதிலும், இந்தப் பஞ்சாட்சர மந்த்ரத்துக்கு நேர் முன்னால் வரும் பெயர் இது.  'மயஸ்கரன்' என்ற பெயருக்கு, விடுதலையளிப்பவன் என்பது பொருள். அந்தப் பொருளைத்தான் இந்த வலைப்பூவின் பொருளாக வைத்திருக்கிறேன்.  இனியும், ஆன்மீகத்தைப் பற்றிய எனது கருத்துகள், இந்த வலைப்பூவில் இடம்பெறும். ஆன்மீகம் என்றவுடன், அது, சில ஆன்மீகவாதிகள் செய்வதுபோல, மற்ற மதங்களையும் மக்களையும் பழித்து,  சார்பு நிலையுடைய கருத்துக்களையே விடாமல் சொல்லிவரும் என்று எண்ணிவிட வேண்டாம். இந்த வலைப்பூவில், திறந்த மனதுடைய கருத்துக்களே இடம்பெறும். எவர் மனமும் புண்படாது.  எனவே, வாருங்கள். . மிகப் பிரம்மாண்டமான சமுத்திரமாகிய ஆன்மீகத்தில் முழுகி, அந்தச் சமுத்திரத்தினுள் அடங்கியிருக்கும் எண்ணிறந்த ரகசியங்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.


என்னைப்பற்றி . . மிகச்சிறுவயதுமுதலே ஆன்மீகத்தில் இறங்கி, அதன் கரையில் இருக்கும் சிப்பிகளையும், முத்துகளையும் மட்டுமே எடுத்துப் பார்த்திருக்கும் சிறுவன் நான். எனக்கு முன்னர், கருநீல நிறத்தில், தனது எண்ணற்ற அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பெரும் சமுத்திரமான ஆன்மீகம், ஒரு பெரும் ராட்சஸ ஜந்துவைப்போல் ஆர்ப்பரித்துக்கொண்டு, அருகில் நெருங்குபர்களைக் கபளீகரம் செய்துவிடும் முடிவோடு எல்லையே இல்லாமல் விளங்குகிறது.  இச்சமுத்திரமாகிய ஆன்மீகத்தின் அலைகளின் மிகச்சிறு துளிகள், என்மீது அவ்வப்போது தெளித்ததுண்டு.  இப்படித் தெளிக்கப்பட்டதனாலேயே, அந்தச் சமுத்திரத்தில் குதித்து, அந்தச் சமுத்திரமாகவே ஆகிவிடும் நிலையை எதிர்பார்த்து, கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். எப்போது அது நடக்குமோ தெரியாது.
  
முதல் கட்டுரையாக நான் எழுத எண்ணியிருக்கும் விஷயம், அத்வைதம் பற்றியது. இந்து மதத்தின் மூன்று கோட்பாடுகளில் ஒன்றாக விளங்கும் விஷயம். மற்ற இரண்டு கோட்பாடுகள், விஷிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம். இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்; த்வைதம் என்பதற்குப் பொருள்: 'இரண்டு' என்பது. சமஸ்கிருதத்தில், 'தவி' என்ற சொல்லுக்குப் பொருள், 'இரண்டு' என்பதாகும். எனவே, அதனையொற்றி, த்வைதம் என்ற சொல்லுக்கும், இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது. பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது, கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதே த்வைதம் என்ற கோட்பாடு சொல்லும் உண்மை. அதாவது, பரமாத்மா என்ற கடவுளை, ஜீவாத்மா என்ற அவனால் படைக்கப்பட்ட உயிர், பக்தி செய்துகொண்டேதான் இருக்கவேண்டும் என்று த்வைதம் சொல்கிறது.


சரி. இதில் என்ன தவறு? கடவுளை எண்ணியெண்ணி உருகுவதுதனே முறை? கடவுள் என்று ஒருவர் இருக்கையில், அவரைப் பக்தி செய்துகொண்டே இருக்கும் மனிதனும் இருக்கத்தானே வேண்டும்? இப்படியொரு கேள்வி எழுகிறதல்லவா? த்வைதக் கோட்பாடு தவறேயில்லை என்பதுதான் நான் சொல்வதும். த்வைதமும் இருக்கத்தான் வேண்டும். ஆனால், த்வைதமே எப்பொழுதும் கூடாது என்பதே நான் சொல்லவரும் விஷயம். அதாவது, ஒரு மனிதன், கடவுளை பக்தி செய்யும் ஆரம்ப காலத்தில், கட்டாயம் த்வைதம் வேண்டும்.  யோசித்துப் பாருங்கள்: 'கடவுளும் நானும் ஒன்று. எனவே, என்னையே நான் எப்படிக் கும்பிடுவது? ஆகையால், பக்தியே எனக்குத் தேவையில்லை' என்று விபரீதமாக ஒரு மனிதன் சிந்திப்பதற்கே, த்வைதமே வேண்டாம் என்ற நிலை வழிசெய்யும். எனவே, தொடக்க நிலையில், 'கடவுளும் நானும் வேறு; அவனாகவே நான் ஆவதற்கு, முதலில், அவனை எண்ணிப் பக்தி செய்யும் நிலை வேண்டும்; பக்தியில் நமது மனம் கரைந்து, முடிவில் அவனாகவே நாம் மாறிவிடும் அத்வைத நிலை சித்திக்கும்; அதுவரை, த்வைத நிலையாகிய கடவுளும் நானும் வேறு என்ற எண்ணத்திலேயே வழிபட்டு வர வேண்டும்' என்றே ஒரு மனிதன் தனது இன்னிங்க்ஸை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் முறையும் கூட.


என்னடா இந்த ஆள் அத்வைதம் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு த்வைதத்தைப் பற்றியே அளந்துகொண்டிருக்கிறானே என்று தோன்றுகிறதா? அத்வைதம் என்ற முடிவுநிலை, த்வைதம் என்ற ஆரம்ப நிலையின் மூலமாகவே சித்திக்கிறது. எனவே, ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு, அவசியம் த்வைதம் தேவை.
  
அத்வைதம் - அதாவது, அ - த்வைதம் என்றால், இரண்டு இல்லை என்பது பொருள். அதாவது, ஜீவாத்மா பரமாத்மா என்ற வேறுபாடு இல்லை என்பது இங்கே பொருளாகிறது. மற்ற சித்தாந்தங்கள், கடவுள் என்று ஒருவன், சொர்க்கம் என்ற ஒரு இடத்திலோ, அல்லது அவனுக்கென்று இருக்கும் ஒரு இருப்பிடத்திலோ இருக்கிறான் எனவும், இறப்புக்குப் பின், அந்த இடத்துக்கு நாம் சென்று, அவனை வழிபட்டுக்கொண்டே இருப்போம் என்றும் வலியுறுத்த, அத்வைதமோ, ஒரே போடாக, இறந்தபின்தான் மோட்சம் என்பது இல்லை என்றும்,  உயிரோடு இருக்கும்போதே மோட்சத்தை அடைய முடியும் என்றும் சொல்லிவிடுகிறது. எப்போது ஒருவன், தானும் கடவுளும் வேறல்ல என்னும் உண்மையை அனுபவபூர்வமாக புரிந்துகொண்டுவிடுகிறானோ, அப்போதே அவன் மோட்சத்தை அடைந்துவிடுகிறான் என்பதே அத்வைதம் சொல்லும் உண்மை.  இங்கே, அனுபவபூர்வமாக என்பது முக்கியமான வார்த்தை. யார்வேண்டுமானாலும் மிக எளிதில் சொல்லிவிடலாம் - கடவுளும் நானும் ஒன்றுதான் என்பதை. ஆனால், அதை அனுபவத்தில் உணர்ந்தாயா என்றே அத்வைதம் கேள்வி கேட்கிறது. நாம் ஒரு வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலை, நாம் இன்ன இன்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாமும் அவற்றைச் செய்துவிட்டு, அந்த வேலையை நமது பெயரோடு போட்டுக்கொள்கிறோம் - என்ஜினியர் என்றோ மருத்துவர் என்றோ அல்லது இன்னும் அவற்றைப்போலவே இருக்கும் பல்வேறு தொழில்களாகவோ.  அந்த வேலையைச் செய்யாத ஒருவன் - வெளியிலிருந்து அந்த வேலை செய்பவர்களை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மனிதன் - நானும் ஒரு மருத்துவர்தான் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும்? அவன் ஒரு பைத்தியம் என்று ஊர் முடிவுகட்டிவிடுமல்லவா? (இப்பொழுது இது சகஜமாக நடந்துகொண்டுதானிருக்கிறது என்பதை விட்டுவிடுவோம்). அதைப்போல்தான், அத்வைதம் என்ற நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே அவன் ஞானி. சும்மா வாய்வார்த்தைகளால் அளந்துகொண்டு திரிந்தால் அவன் ஒரு ஆஷாடபூதி என்றே அர்த்தம்.


கடவுளும் நானும் ஒன்று என்ற அத்வைத நிலை சித்திக்கும் ஒரு மனிதன், மோட்சத்தை அடைந்துவிடுகிறான். மோட்ச நிலை என்பது வேறொன்றுமில்லை - தெளிந்த அத்வைத ஞானம் என்பது, இறைவன் என்று நாம் சொல்லும் பிரம்மத்தின் நிலையான ஆனந்தமே. எப்பொழுதும் ஆனந்தமாக இருந்துகொண்டிருக்கும் பிரம்மத்தில் தோய்ந்த நிலை அது. அந்த நிலையில் இருக்கும் அந்த மனிதன், தனக்கு இன்னமும் எவ்வளவு நாட்கள் இந்த பூமியில் வாழ  இருக்கிறதோ, அத்தனை நாட்களும் இதே நிலையில் ஆனந்தமாக வாழ்ந்துவிட்டு, உடல் மரணமடையும்போது, அவனது உயிர், பிரம்மத்திலேயே ஒன்றிவிடுகிறது. இதுதான் அத்வைதம் in a nutshell.


இந்த அத்வைத ஞானம் என்பது, டக்கென்று வந்துவிடாது என்று மறைநூல்கள் சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு, அத்வைதத்தைத் தேடிச்செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவதற்கே, பல பிறவிகள் தேவைப்படும் என்பது அவை சொல்லும் உண்மை. இதைப்பற்றி, நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பிரபல ஆன்மீகவாதி சொல்வது என்னவென்றால்: 'சில குகைகளில், சுண்ணாம்புத்தாது, சொட்டுச்சொட்டாக கூரையிலிருந்து விழும்; அப்படி விழும் தாது, தரையில் இருந்து மெதுவே வளர ஆரம்பிக்கும்; அப்படி வளரும் இந்தத்தாது, ஒரு காலகட்டத்தில், மேலே சொட்டிக்கொண்டிருக்கும் அந்த இடத்தைச் சந்திக்கும்; அப்போது ஒரு பெரிய சுண்ணாம்புத் தூணாக அது மாறும். இதற்கு ஆங்கிலத்தில் ஸ்டேலக்டைட் (Stalactite)  மற்றும் ஸ்டேலக்மைட் (Stalagmite) என்று பொருள். ஆனால், நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இப்படித் தூணாக மாறுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டம், பல கோடி வருடங்கள். இதைப்போலவே, மனிதன், இறைவனின் இயல்பு புரிந்து, அதுவாகவே தானும் ஆகவேண்டும் என்று முயற்சித்தால்,  இறைவனும், தனது அருளை மனிதனின் மேல் பொழிவார்; ஒரு காலகட்டத்தில், இந்த இரண்டு விஷயங்களும் சந்திக்கையில், அத்வைத ஞானம் கிடைக்கும். ஆனால், இதற்கும், பல்லாயிரக்கான ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை'. 


இவ்வளவு சுலபமாக நமக்குப் புரியும் வகையில் எளிய முறையில் இந்த அத்வைத தத்துவத்தை விளக்கிய அந்த ஆன்மீகவாதி, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெரிதாக எதுவும் இல்லை. சிறிது ஓய்வுக்குப்பின் மறுபடி அருள்பாலிக்க வருவார். 


இனி வரும் கட்டுரைகளில், அத்வைத தத்துவம் மட்டுமன்றி, ஆன்மீக உலகின் அதிசயங்கள், மர்மங்கள் ஆகிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். அது மட்டுமன்றி, எனது அனுபவங்களில் நான் கண்ட பல வியப்பூட்டும் விஷயங்களையும் பார்ப்போம். நாளையோ அல்லது நாளை மறுநாளோ எனது கட்டுரை வரும். அதுவரை, ஆனந்தமாக இருங்கள். வாழ்த்துகள்.