Wednesday, April 6, 2011

ஸத்ய ஸாயிபாபா: கேள்வியும் பதிலும்


நண்பர்களே . . இன்று நாம் பார்க்கப்போகும் விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டுமே. அதேபோல், திறந்த மனதுடன் எந்த விஷயத்தையும் அணுகும் நண்பர்களும் இதனைப் படிக்கலாம்.  ஏனெனில், மூடிய மனதுடன், ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே வாதிடுபவர்களுக்கு, இதைப் படிப்பதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு சரி. வேறு எந்த நன்மையையும் ஏற்படாது.  திறந்த மனத்துடன் இதனைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும் பின்னூட்டமாக இடலாம். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.

ஸாயிபாபா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி, உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாகவே, சாயிபாபா மீது பக்தி இருக்கும் அதே அளவுக்கு, அவதூறுகளும் மலிந்தே இருக்கின்றன என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். ஸாயிபாபா பற்றியும், அவரது தற்போதைய நிலை பற்றியும் விரிவாகப் பார்த்துவிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அவர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளையும் விரிவாகப் பார்த்துவிடலாம். 

முதலில், நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்மீகுலகில், எத்தனைக்கெத்தனை உண்மையான இறைமனிதர்கள் இருக்கின்றனரோ, அத்தனைக்கத்தனை போலிகளும் உண்டு.  இந்தப் போலிகளால், உண்மையான இறைமனிதர்கள்மேலும் சந்தேக நிழல் படிகிறது. இது முதல் விஷயம்.

நமது இந்து மதத்தில், இறைமனிதர்கள் பலர் இருந்திருக்கின்றனர். புராணங்களை எடுத்துக்கொண்டால், வேத காலத்தில் வாழ்ந்த பல முனிவர்களையும், அவதாரங்களையும் பற்றி அவை விரிவாகச் சொல்லிச் செல்கின்றன. சில உதாரணங்களாக, ததீசி, மரீசி, வியாஸர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர். கண்வர் ஆகிய எல்லோருக்கும் தெரிந்த முனிவர்களை எடுத்துக்கொள்ளலாம். வேதத்தில், இந்த முனிவர்கள் அருளிச்செய்த பல மந்த்ரங்கள் உள்ளன. அந்த மந்த்ரங்களிலேயே, இன்னின்ன மந்த்ரத்துக்கு ஆசிரியர் இன்னின்ன முனிவர், இந்த மந்த்ரத்தை இன்னின்ன முறையில் உச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் முறையான வழியே வகுத்துத் தரப்பட்டுள்ளது. இந்த முனிவர்களைப் பற்றிய பல கதைகளையும், புராணங்களில் படிக்கலாம். இவர்கள், பல அதிசயங்களை விளைவித்ததாக அவை சொல்லும்.

நமக்கெல்லாம் பொதுவாக ஒரு குணம் உண்டு. நாம் வாழும் காலமாகிய தற்போது, யாராவது ஒரு சாமியார், ஏதாவது அதிசயம் நிகழ்த்திவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன், நமது மனதில் முதலில் தோன்றும் எண்ணம் என்னவென்றால், இந்த சாமியார் ஒரு போலி என்பதே. அந்த அளவு, போலிச்சாமியார்கள் மலிந்துவிட்டனர். ஆனால், அதே நேரத்தில், உண்மையான இறைசக்தி, கட்டாயம் அதிசயங்களை நிகழ்த்தும்  தன்மையுடையது என்பதில் சந்தேகமேயில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இது ஏனெனில், எனது கண்கூடாக  நான் அனுபவித்த பல அதிசயங்கள் உள்ளன. ஒரு காலத்தில் பகுத்தறிவாளனாக இருந்து, நான் பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். அவையத்தனைக்கும் பதிலைக்  கருணையுடன் அந்த இறைவன் அளித்திருக்கிறான்.  அந்த அடிப்படையில், யாரோ சொல்லிக் கேட்டு அதனை எழுதாமல், எனக்கு நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே தான் நான் எழுதிவருகிறேன். நான், சென்ற பதிவில் சொல்லியுள்ளபடி, அவ்வப்போது இறைவன், இறைமனிதர்களை இந்தப் பூமியில் அவதரிக்க வைத்தே இருக்கிறான். இந்த இறைமனிதர்களால், பெரும் மாற்றங்கள் மலர்ந்திருக்கின்றன. ரமண மகர்ஷியை மறக்கவியலுமா? அவர் ஒரு போலி என்று யாராவது சொல்லமுடியுமா? பாண்டிச்சேரி அரவிந்தர்? பாரதியாருக்கே குருவாக இருந்தவர். இன்றும், பக்தர்கள் பலருக்கும் அருள்புரிந்துகொண்டிருப்பவராக இருக்கிறார். இதேபோல், இந்தியாவெங்கும் பலராலும், கடவுளின் ஸ்தானத்தில் வைத்து வழிபடப்படும் இன்னொரு தெய்வமனிதரும் இருக்கிறார். அவர்தான் ஷீர்டி ஸாயிபாபா. அவர், கட்டாயம் போலி அல்ல. ஏனெனில், அவரால் அருள் பெற்றவர்கள் இன்னமும் பலபேர். ஸ்ரீ ஸாயி சத்சரித்ரம் என்ற அவரது சரிதையைச் சற்றே புரட்டிப்பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது, கட்டாயம் ஒரு புரட்டு நூல் அல்ல.  அதைப் படித்தாலே, அதன் authenticity நன்றாகப் பதியும்.

மேலே நாம் பார்த்த தெய்வமனிதர்கள் அத்தனை பேரும் தற்போது நம்மிடையே உயிரோடு இல்லை. ஆனால், நம்மிடையே உயிரோடு இருப்பவர்களில், சந்தேகமில்லாமல் தெய்வமனிதர் என்று சொல்லப்படக்கூடிய ஒருவர்தான் ஸ்ரீ ஸத்யஸாயி பாபா. இவரது பெயரை உச்சரித்தவுடனேயே, சிலரது இதழ்களில் ஒரு கேலிச்சிரிப்பைக் காண்கிறேன். அதன் காரணமும் புரிகிறது. 'இந்த மனிதர், கட்டாயம் ஒரு போலி. அவரைப்போய், தெய்வமனிதர் என்று கதைக்கிறீர்களே' என்று என்னிடம் நீங்கள் கேட்பதும் புரிகிறது. இந்தக் கேள்விக்குப் பதில், இந்தக் கட்டுரையின் வேறோரிடத்தில் வழங்கப்படும்.

அவரைப் பற்றி உலவும் குற்றச்சாட்டுகளை முதலில் பார்த்துவிடுவோம்.

முதல் குற்றச்சாட்டு, ஸாயிபாபா, தனது பக்தர்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்பது. இதனைச் சற்று விரிவாகவே பார்த்துவிடுவோம். இணையத்தை சற்றே புரட்டினால், 'ஸாயிபாபா என்னிடம் தவறாக நடந்துகொண்டார்' என்று பலரும் புலம்பியிருப்பதைக் காணமுடியும். ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது? சாயிபாபாவிடம் ஒரு வழக்கம் உண்டு. தினமும் காலையிலும் மாலையிலும், பக்தர்களிடையே வந்து, சிலரைத் தனியாகப் பேசுவதற்காக அழைத்துச் செல்வார். அவரது பக்தர்களிடையே, 'இன்டர்வ்யூ' என்று இதற்குப் பிரபலமான பெயர் உண்டு. இந்த இன்டர்வ்யூவில், தனியே அழைத்துச்சென்று, ஹோமோசெக்ஸ் தொந்திரவு கொடுத்தார் என்று அவர்களது குற்றச்சாட்டு செல்லும். இதற்குப் பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், அந்த இன்டர்வ்யூ என்பதைச் சற்று விரிவாகப் பார்த்துவிடுவோம்.

ஸாயிபாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில், மையமான பஜனை மன்றம் உண்டு. உண்மையில், இந்தக் கட்டிடத்துக்கேதான் பிரசாந்தி நிலையம் என்று பெயர். இந்தக் கட்டிடத்தின் கீழ்த்தளம் முழுமையுமாக ஆக்கிரமித்திருப்பது ஒரு பெரிய பஜனைக்கூடம். அந்த பஜனைக்கூடத்தின் மேல் மூலையில், ஒரு சிறிய அறை உண்டு.  இந்த அறையின் பெயர் தான் இன்டர்வ்யூ அறை என்பது. ஸாயிபாபாவால் தேர்வு செய்யப்படும் பக்தர்கள், இந்த அறையில்தான் குழுமுவார்கள். அந்த அறையானது, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பிரிவில், ஸாயிபாபாவுக்கு ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கும். மற்ற பக்தர்களெல்லாம், அந்த நாற்காலியைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். இதிலிருந்து, குடும்பம் குடும்பமாகவோ, அல்லது தனியாக வந்திருப்பவர்களுடன் தனியாகவோ உரையாட, பாபா அந்த இன்னொரு பிரிவுக்குச் செல்வார். இரண்டு பிரிவுகளும், ஒரு மெல்லிய திரைச்சீலையால் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்தப்பக்கம் அமர்ந்திருப்பவர்களுக்கு, அந்தப் பக்கம் நடப்பது தெளிவாகத் தெரியும். அது மட்டுமல்லாமல், அந்தப் பக்கம் பெசப்படுபவைகளும் தெளிவாகக் கேட்கக்கூடியவகையில்தான் அந்த அறையின் அமைப்பும் இருக்கும். ஆகவே, அந்தப்பக்கம் பக்தர்களுடன் தனியாகப்பேசுகையில், மெல்லிய குரலில் பேசுவது பாபாவின் வழக்கம். இதுதான் பக்தர்களுடன் 'தனியாக' பாபா பேசுவதன் சாராம்சம். இப்படி பாபாவால் தேர்வு செய்யப்பட்டு அவருடன் உரையாடியவர்களின் எண்ணிக்கை, பல்லாயிரம். இவர்களில் யாருமே சொல்லாத குற்றச்சாட்டுதான், சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ஆகா, இது முற்றிலும் தவறான பொய்ப்பிரச்சாரம் என்பது கண்கூடு.

இன்னொரு விஷயம் என்னவெனில், இப்படிப் போய்ப் பேசிய பலரையும் எனக்கே நன்றாகத் தெரியும். அந்த அறைகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

இரண்டாம் குற்றச்சாட்டு, ஸாயிபாபா, கீழ்த்தரமான மேஜிக் வேலைகளைச் செய்து, பக்தர்களைக் கவர்கிறார் என்பது. இதனைப்பற்றியும் விபரமாகப் பார்ப்போம்.

நம்மால், பொருட்களை அந்தரத்தில் இருந்து வரவழைக்கமுடியும் என்ற விஷயத்தை நம்ப முடிவதில்லை. காரணம், விஞ்ஞானபூர்வமாக அது சாத்தியமே இல்லை என்று நாம் நினைப்பதே. இந்த இடத்தில், ஒரு சிறிய உதாரணம் தருகிறேன். எங்களது வீட்டுக்கு, பல வருடங்கள் முன்பு, காயத்ரி ஸ்வாமிகள் என்று அழைக்கப்படும் ஒருவர் வந்தார். எங்களுடன் பேசிக்கொண்டே, மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்தார். சட்டை அணியவில்லை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவரது உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையை வரவழைத்துக் கொடுத்தார். இத்தனைக்கும், அவர், எந்த விதமான அசைவையும் நிகழ்த்தாமல், கையை எங்கள் பார்வையில் இருந்து ஒளிக்காமல் செய்த அற்புதம் அது.  அதே காயத்ரி ஸ்வாமிகள், இதைப்போலவே, எனது நண்பர் ஒருவரின் வீட்டிலும் சென்று, ஒரு பெரிய சங்கை வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். மிக மிக நெருக்கத்தில், கண் முன்னர் நடந்த அற்புதம் இது. காயத்ரி சுவாமிகளைப் பற்றி இணையத்திலோ, அல்லது புத்தகங்களிலோ தேடிப்பாருங்கள். சக்திவாய்ந்த ஒரு மகான் என்று தெரியவரும். அவர் இப்போது இல்லை.

ஸாயிபாபாவே, தனது இந்த 'மிரகிள்' என்று அழைக்கப்படும் விஷயத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். இதைப் படியுங்கள்.


"மிரகிள்கள், எனது விசிட்டிங் கார்டுகள். நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்? புதிய மனிதர் ஒருவரைப் பார்த்தால், உங்களது விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்து அறிமுகம் செய்துகொள்கிறீர்கள் அல்லவா? அதைப்போலவே, நானும், ஒரு மனிதரிடமோ அல்லது ஒரு குடும்பத்திடமோ என்னை  அறிமுகம் செய்துகொள்ளப் பயன்படுத்துவதே இந்த மிரகிள்கள். இவற்றுக்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. நீங்கள் என்னிடம் வரத்துவங்கும் ஆரம்பகாலத்தில், உங்களுக்குத் தேவையானவற்றை நான் வழங்குவேன். இது எதற்கென்றால், சிறுகச்சிறுக,  வருங்காலத்தில், நான் விரும்பும் பொருளை உங்களுக்குக் கொடுக்க உங்களைத் தயார்படுத்துகிறேன். நான் உங்களுக்குக் கொடுக்க விரும்பும் பொருள், நிறைவானது. அழியாதது. ஆனந்தமானது. நீங்களே கடவுள் என்ற புரிதலே அது. "

இது ஒரு பக்கம் இருக்கட்டும். வேறு பல எண்ணற்ற முறைகளில்,  ஒரு பக்தனிடம் பேசும்போதோ, நடக்கும்போதோ,  அன்பின் மிகுதியால், பல பொருட்களைச் சிருஷ்டித்தும் அவர் தந்திருக்கிறார். சுவையான தின்பண்டங்களிளிருந்து, மோதிரம், ஜெபமாலை,  விக்ரகம்,  சங்கிலி, பென்டன்ட்,  படங்கள். ஏன்? பல்செட் ஆகிய பொருட்கள், அந்தப் பட்டியலில் அடங்கும்.  இவை, அந்த மனிதனின்மேல் அவருக்கு இருக்கும் அன்பு, பொங்கிப்பெருகுவதன் வெளிப்பாடேயாகும். இது மட்டுமல்லாது, அந்தப் பொருட்கள், அந்த மனிதனின்பால், பாபாவின் அருளை உறுதிசெய்யும் ரட்சைகளாகவும் விளங்குகின்றன.

இந்த இடத்தில், இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். 'ரமணர் இதைப்போல் அதிசயங்கள் நிகழ்த்தவில்லையே? காஞ்சி மகாபெரியவர் இதைப்போல் பக்தர்களுக்கு எதையும் சிருஷ்டித்துத் தரவில்லையே? எனவே, சாயிபாபா ஒரு ஃபிராடு' - என்று சொல்லும் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்படிச் சொன்ன பலரும், ஏதோ ஒரு சிறிய பொருளை ஸாயிபாபா தனக்காகச் சிருஷ்டிசெய்து தந்தவுடனே, அவரது பெரும் பக்தர்களாக மாறியிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.  இங்கே நினைவுகொள்ளப்படவேண்டிய விஷயம் என்னவெனில்: அவதாரங்கள், பல்வேறு வகைப்படும். ரமணர் ஒரு வகை. மகாபெரியவர் ஒரு வகை. பாபா மற்றொரு வகை. ராமனையும் கிருஷ்ணனையும் சற்றே ஒப்பிட்டுப்பாருங்கள். 'நான் ஒரு சாதாரண மானிடன் மட்டுமே' என்றே சொல்லி, ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திறம்பட வாழ்ந்துகாட்டிய ராமனும், 'அர்ஜுனா. . நானே கடவுள். என்னை வழிபடு. இதோ எனது விஸ்வரூபம்' என்று சொல்லி, தனது தெய்வீகத்தை சக்திவாய்ந்தமுறையில் வெளிப்படுத்திக் காட்டிய கண்ணனும் ஒன்றுதானே? ராமன் அமைதியாக இருந்தவன். எனவே, அவன் மட்டுமே கடவுள். கண்ணன் ஒரு போலி என்றா நாம் சொல்கிறோம்? தெய்வீக மனிதர்களும், பல்வேறு வகைப்படுவார்கள் என்பதற்கு, இது ஒரு உதாரணம்.

மூன்றாவது விஷயம் என்னவெனில், நம்மிடையே உள்ள தப்பான ஒரு அபிப்ராயம்தான். 'சாமியார் என்றால், உடுத்த உடை கூட இல்லாமல், கிழிந்து தொங்கும் உடைதான் அணியவேண்டும்; எங்கு சென்றாலும் நடந்துதான் செல்லவேண்டும்; ஆள் அம்பு படை எதுவும் கூடாது; அப்போதுதான் நம்புவேன். சாயிபாபாவிடம் இருக்கும் சொத்து, ஏராளம். அவர், எங்கு சென்றாலும், காரில் தான் செல்கிறார். எனவே, அவர் ஒரு ஃபிராடு' என்ற நமது அபிப்பிராயத்தைத் தான் சொல்கிறேன். தன்னிடம் உள்ள இந்த விஷயங்களை, நல்லமுறையில் மட்டுமே அல்லவா அவர் பயன்படுத்துகிறார்? பணக்காரர்கள் கொண்டுவந்து கொட்டும் பணம் எல்லாமே, சமூகசேவைக்கு மட்டுமேயல்லவா பயன்படுத்தப்படுகிறது? அவரைப்போல் இரண்டு பிரம்மாண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டி, இருதய அறுவைசிகிச்சையிலிருந்து அத்தனையும் இலவசமாகவே செய்துதரும் சாமியார்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? அவரது கல்லூரிகளில், படிப்பும் முழு இலவசம். பாலைவனமாக இருந்த ராயலசீமா முழுதும் தண்ணீரை ஏற்பாடு செய்துதந்தவர் அவர். சென்னைக்கும் கிருஷ்ணா நதிநீர் ஏற்பாடு  செய்தவர். அவர்மேல் அவதூறு கிளப்பும் நண்பர்கள் யாருமே, இந்த விஷயங்களைப் பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

இப்பொழுது, பரவலாகக் கிளம்பியுள்ள நான்காவது குற்றச்சாட்டு என்னவெனில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அல்லவா? இதைவைத்துத்தான், தெய்வமாகக் கருதப்பட்ட அவரே இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். தன்னைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளாத ஒரு மனிதர், கட்டாயம் ஃபிராடுதான் என்று சிலபேர் பரப்பிவரும் அவதூறுதான்.

இதற்கு மிக எளிதான பதில் உண்டு. மறுபடியும் ரமணருக்குச் செல்வோம். ரமணரின் கடைசிக்காலத்தில், புற்றுநோயால் அவர் அவதிப்பட்டார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? ராமகிருஷ்ண பரமஹம்சருமே, புற்றுநோயால் கொடும் அவதி அனுபவித்தவரே. ஏன்? இயேசுபிரான் படாத அவதியா? சிலுவையில் அவர் உயிர்நீத்த கதை தெரியுமல்லவா? இவர்கள் அத்தனைபேரும் நினைத்திருந்தால், அந்த வியாதியையோ அல்லது அந்தக் கொடுமையையோ சட்டென்று மாற்றியிருக்கமுடியுமல்லவா? இருந்தும், அவர்கள் அதனை அனுபவித்தது, நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதனால்தான் இல்லையா? உடல் என்பது அநித்தியம். ஆன்மா மட்டுமே நித்தியமான, சத்தியமான வஸ்து என்றே ஸாயிபாபா இத்தனை நாளும் ஓயாது சொல்லிவந்தார். இப்போது, அதனைச் செயல்முறையில் காட்டுகிறார். இந்த அவதூற்றைப் பரப்புபவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 1963 ல் , ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்த பக்கவாத நிலையில், பாபா சில நாட்கள் இருந்தார். ஒரு நாள், அவரைக் கிட்டத்தட்ட தூக்கிவந்து, அமரவைத்தனர். சட்டென்று ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்த பாபா, ஒரு பெரிய உரையாற்றினார். அந்த உரை, இணையத்திலேயே கிடைக்கிறது. இங்கே படிக்கலாம். இதைப்போலவே, எழுபதுகளில், கோவாவில், குடல்வால் வெடித்த நிலையில், படு சீரியஸாக இருந்த பாபா, அடுத்த நாளே அதனைக் குணப்படுத்திய வரலாறும் பாபாவின் பக்தர்களுக்குத்  தெரியும். அதைப்போலவே, இம்முறையும் இனிதே மருத்துவமனையிலிருந்து வெளிவருவார் பாபா. பொறுத்திருந்து பாருங்கள். அவரே, தனது 96 வது வயதுவரை வாழப்போவதாகப் பலமுறை சொல்லியிருக்கிறார். எனவே, பாபாவின் பக்தர்களைக் கலங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருக்கால் அவருக்கு ஏதாவது நேர்ந்தாலும்கூட, அதுவும் பக்தர்களுக்கு ஒரு படிப்பினைதான். ஆன்மாவே சத்தியம் என்ற அவரது கூற்று மெய்ப்பிக்கப்பட்ட்டதாகவே இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுரை மிகப் பெரியதாக வளர்ந்துவிட்டது. இருந்தாலும், ஒருதலைப்பட்சமாக, பிடிவாதமாக, பாபா ஒரு ஃபிராடு என்று சொல்லும் நண்பர்கள், இதனைப் படிக்க நேர்ந்தால், ஓரளவு அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன். எதுவாக இருந்தாலும், நாகரீகமான முறையில் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து பேசலாம்.

ஜேய் ஸாயிராம் !

Friday, April 1, 2011

ஆதிசங்கரரின் காலம் - ஒரு ஆராய்ச்சி



நண்பர்களே . . இன்று நாம் பார்க்கப்போகும் விஷயம், ஆன்மீக உலகின் சென்சிடிவ் பிரச்னை. இன்றும், பல வலைத்தளங்களில் இந்தத் தலைப்பில் உள்ள காரசாரமான கட்டுரைகளைப் படிக்கலாம். இரு தரப்பிலுமே போதிய ஆதாரங்கள் இருப்பதால், எந்தத் தரப்புமே இதுவரை அறுதியாக முடிவுசெய்யப்படாமல் இருக்கிறது. இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்தக் கட்டுரையில், எனது தரப்பினை, போதிய ஆதாரங்களுடன் சமர்ப்பித்து, எதிர்த்தரப்பு முன்வைக்கும் விஷயங்களையும் முழுமையாகச் சொல்லிவிட்டு, எது சரி என்று ஆணித்தரமாக நிலைநாட்ட முயற்சி செய்கிறேன். படித்துவிட்டு, உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் (வருங்காலத்தில் எப்போது படித்தாலும் சரி).

இந்தியாவில், இதுவரை, பல மகான்கள் அவதாரம் செய்திருக்கிறார்கள். இந்துமதத்தில் மட்டுமல்லாது, இஸ்லாம், பௌத்தம், ஜைனம் ஆகிய பிறமதங்களிலும், பல மகான்களைத் தரிசித்திருக்கும் பூமி இது. அப்படிப்பட்ட மகான்களில் தலையாய மகன் ஒருவரைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. வேறெந்த மகான்களுக்கும் இல்லாத சிறப்பு, இந்த மகானுக்கு உண்டு என்பது, சனாதன தர்மமாகிய இந்துமதத்தின் கருத்து. அதேபோல், இந்த மகன் பிறந்திருக்காவிடில், நமக்கு வேறெந்தப் பண்டிகையையும் கொண்டாடும் வாய்ப்பு என்பதே இல்லாமல் போயிருக்கும் என்பதும், இந்துமதம் சொல்லும் உண்மை.

இவ்வளவு முக்கியமாக நாம் குறிப்பிடும் அளவு யார் அந்த மகான்?

அவர் தான் ஆதி சங்கரர்.

பிற மகான்களைப் பற்றித் தெரிந்த அளவு, ஆதி சங்கரரைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆதிசங்கரர், அத்வைதத்தை ஸ்தாபித்தார் என்ற ஒரே ஒரு விஷயம் மட்டுமே நமக்குத் தெரியும். அந்த அளவுதான் நமது கல்விமுறை, நமக்குக் கற்பித்திருக்கிறது. ஆனால், ஆதிசங்கரரைப் பற்றிப் பல சுவையான தகவல்கள் உண்டு. கூடியமட்டும் அவரது வாழ்வைப் பற்றியும், அவரது வாழ்வின் மிகமுக்கியமான மர்மத்தைப் பற்றியும் இங்கே கொடுக்க முயல்கிறேன். அதிலேயே, மேலே நான் கூறிய சென்சிடிவ் விஷயமும் வந்துவிடும்.

ஆதிசங்கரரைப் பற்றிப் பார்க்கும் முன், அவரது காலத்திற்கு முந்தைய சூழல் எப்படி இருந்தது என்பதையும் பார்த்துவிட்டால், அவரது பிறப்புக்கான முக்கியத்துவம் நமக்குப் புரியும்.

ஆதிசங்கரர் பிறந்த காலத்தில், இந்தியாவில், இந்து மதமாகிய சனாதன தர்மத்தைத் தவிர, எழுபத்திரண்டு பிற மதங்கள் இருந்தன என்று, சங்கரரின் வாழ்வைப் பற்றிக் கூறும் நூல்களான சங்கர விஜயங்கள் சொல்கின்றன.  இந்தச் சங்கர விசயங்களில், சில நூல்கள், அவரது வாழும் காலத்திலேயே எழுதப்பட்டன. எனவே, அவற்றின் authenticity சந்தேகமில்லாதது. இந்தியாவில், ஆதியிலிருந்து, சனாதன தர்மமே பின்பற்றப்பட்டாலும், நாளடைவில் வேறு பல புதிய மதங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வந்தன. இந்தப் புதிய மதங்களால், சனாதன தர்மம் சற்றே மங்கியிருந்த சூழல் அது. இந்தப் புதிய மதங்களால் என்ன கேடு வந்துவிட்டது? ஈன அவை இப்போது இல்லை? என்ற கேள்வி எழலாம். இந்தப் புதிய மதங்கள், ஆன்மாவைக் கடைத்தேற்றுவதற்குப் போதியதாக இருந்ததே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைச் சொல்லி, மக்களைக் குழப்பின. அவற்றில் சில மதங்கள், கடவுளே இல்லை; வாழ்க்கையை அனுபவிப்பதே லட்சியம் (சார்வாக மதம் - இப்போது பரவலாக நாத்திகம் என்று சொல்லப்படுவது) என்றுவேறு பரப்பிவந்ததால், மக்களுமே குழம்பிப் போயிருந்தனர். பொதுவில், சமூக வாழ்விலும் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவி வந்தது. எதைப் பின்பற்றுவது என்றே தெரியாமல், மக்கள், குழம்பிப் போயிருந்த காலகட்டத்தில் தான் ஆதிசங்கரர் பிறந்தார். இது, சங்கர விஜயங்கள் சொல்லும் உண்மை. இப்போது, இன்னொரு கேள்வி. சங்கர விஜயங்கள் என்று நீங்கள் சொல்லும் புத்தகங்கள், எப்படியும் ஆதி சங்கரரைப் போற்றி எழுதப்பட்டவைதானே? ஆகவே, மற்ற மதங்களை கட்டாயம் தூற்றத்தான்  செய்யும். அப்படியிருக்க, அவை நடுநிலைமையாக விஷயங்களைச் சொல்லும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில், சங்கர விஜயங்களில்  மட்டும் இல்லாமல்,  அந்தப் பிற மதங்களின் புத்தகத்திலேயே கூட, ஆதி சங்கரரைப் பற்றிச் சொல்கையில், நாம் பார்க்கப்போகும் உண்மைகளையே சொல்லியிருக்கிறது என்பதுதான். எனவே, நான் சொல்லும் விஷயங்கள், நடுநிலை தவறாதவை என்பதற்கு  இதுவே உதாரணம்.

இன்னொரு விஷயமும் கூறவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள உண்மை என்னவெனில், ஒரு அவதாரம் ஏற்படுகிறது என்றால், அது சும்மா just like that நடப்பதில்லை. ஒரு அவதாரத்துக்கான முக்கிய நோக்கம், மக்களை மேன்மைப்படுத்துவதே. வாழ்க்கைச் சுழலில் சிக்கியுள்ள மக்களை, இதுதான் விடுபடும் வழி என்றுசொல்லிக் கடைத்தேற்றுவதே ஒரு அவதாரத்தின் முக்கிய அம்சம். பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்லுவது இதுதான்.

யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
இதற்கு அர்த்தம், எளிமையான வகையில் சொல்லப்பார்க்கிறேன்.

எப்பொழுதெல்லாம் தர்மம் இருட்டால் மூடப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தர்மத்தைக் கைதூக்கிவிட, என்னை நானே பிறப்பித்துக்கொள்கிறேன். சாதுக்களை ரட்சிக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும், யுகம் தோறும் அவதரிக்கிறேன்.

இதுதான் பொருள்.

இப்பொழுதெல்லாம், திரைப்படங்களில், பன்ச் டயலாக் என்று சொல்லப்படுகிறதே; ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, கடவுளே வெளியிட்ட ஆணித்தரமான பன்ச் இது.  அர்ஜுனனுக்கு உறுதி கூறுகிறார் கிருஷ்ணர். எக்காலத்திலும் அவரது இந்த உறுதிமொழி தப்பவே தப்பாது. இது நடந்தே தீரும். எப்பொழுதெல்லாம் உலகத்தின் சமநிலை தவறுகிறதோ, அப்பொழுதெல்லாம் இறைவன், அவதாரங்களை நிகழ்த்திக்கொண்டே தான் இருப்பான். எல்லா மதங்களிலும் இது நடக்கும்.  உலகத்தின் அக்கிரமங்களின் வீரியத்தைப் பொறுத்து, சில சமயம் அடியவர்களை அனுப்பியும், மிகச்சில சமயம் தானே அவதரித்ததும் வருகிறான் இறைவன்.

கிருஷ்ணர் சொல்லும் இந்த அடிப்படையில் பார்த்தாலுமே, சங்கரர் பிறந்த காலகட்டத்தில், எழுபத்திரண்டு மதங்கள் தோன்றி மக்களைக் குழப்பிக்கொண்டிருந்தன. அந்த இருட்டை அகற்றவே சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.

சங்கரர் யார் ?

அவதாரம் நிகழ்வதற்கான காரணத்தைப் பார்த்தாயிற்று.  பொதுவாக ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லப்படும் விஷயம், அவர் சிவாவதாரம்  என்பது. அதிலும், தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமே சங்கரர் என்றுதான் அனைத்து ஆதாரங்களும் சுட்டுகின்றன.  இதற்கு ஒரு ரசமான கதையும் சங்கர விஜயங்களில் இருக்கிறது. சனாதன தர்மம், பிற மதங்களால் ஷீணிக்கப்படுவதனால், தேவர்கள் சென்று சிவனிடம் முறையிட்டதாகவும்,  சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொடுப்பதாக சிவன் உறுதிகூறியதாகவும், அதனாலேயேதான் சங்கராவதாரம் நிகழ்ந்தது எனவும் அவை சொல்லும்.  இங்கே இன்னொரு கேள்வி. பொதுவில், எவருடைய புகழ்பாடும் புத்தகமாக இருந்தாலும் சரி; அவை, அவரை, அவதாரம் என்றுதான் சொல்லும். அப்படியிருக்க, இந்த சங்கரவிஜயங்கள் மட்டும் எப்படி வேறுபடும்? எனவே, அவை சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதற்கு விடை, சங்கரவிஜயங்கள் மட்டுமல்லாது, பிற நடுநிலையான புத்தகங்களிலும்  - சங்கரால் ஒழிக்கப்பட்ட ஜைன மதத்தின் புத்தகம் ஒன்றில் கூட அவரைச் சிவவதாரம் என்று சொல்லியிருக்கிறது - இருக்கும் விஷயங்களைப் படித்தாலே போதும். அவற்றையும் இங்கே பார்க்கத்தான் போகிறோம்.

ஆகவே, அவதாரம் நிகழும் காலகட்டம் வந்தது. சிவகுரு என்பவருக்கும், ஆர்யாம்பாள் என்னும் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார் சங்கரர். இவர்கள், பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்கள். இங்கே இன்னொரு கேள்வி. ஏன் பிராமண ஜாதியிலே பிறக்கவேண்டும்? எல்லா ஜாதிகளும் ஒன்றுதானே? எனவே, பிற ஜாதிகளில் பிறந்தால் என்ன தவறு? இதற்கு விடை, பல ஜாதிகளிலும் அவதாரங்கள் நிகழ்ந்துதான் வந்திருக்கின்றன. கசாப்புக்கடை வைத்திருந்த தர்மவ்யாதர், ஆத்மஞாநியாக விளங்கியவர் என்று பாரதம் சொல்கிறது ('கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதை இங்குதான் வருகிறது). அதேபோல், நமது அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் இல்லாத ஜாதியா? இங்கு குறிப்பாக பிராமண ஜாதியில் சங்கரர் பிறந்ததற்குக் காரணம், அந்தச் சூழலில், அவர்கள் தான் வேத சாஸ்த்ர விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். எனவே, இந்த ஜாதியில் பிறந்தால் மட்டுமே பிற மதத்தினருடன் வாதம் புரிந்து வேதமதத்தை நிலைநாட்ட இயலும் என்பதே.

இங்குதான், மேலே நான் மர்மம் என்று சொல்லிய விஷயம் வருகிறது.

நமது சரித்திரப் புத்தகங்களில் நாம் படித்திருப்போம்; ஆதிசங்கரர் பிறந்தது கி.பி 788 என்றும், அவர் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்தார் என்றும், அவர் இறந்த வருடம் கி.பி 820  எனவும். நான் சொல்லப்போகும் விஷயம் என்னவெனில், ஆதிசங்கரர் பிறந்த வருடம், கி.மு 509 என்பதே. அவர் முக்தியடைந்த வருடம், கி.மு 477 என்பது எனது வாதம். என் வாதம் மட்டுமல்ல; மேலும் பல விஷயம் தெரிந்தவர்களின் வாதமும் இதுதான். அப்படியென்றால், இப்பொழுது ஏன் கி.முவை கி.பி என்று குறிப்பிடவேண்டும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இதற்கு விடையை, சற்றே தீர்க்கமாக அலசலாம் வாருங்கள்.

சங்கரரின் காலம் : 'ஸான்ட்ரகோட்டஸ்' யார்?

ஆதிசங்கரர் பிறந்த வருடம், கி.மு 509 என்பதற்கு முதல் ஆதாரம் - சங்கரவிஜயங்களில் கொடுத்திருக்கும் சான்று. 'பிராசீன சங்கர விஜயம்' என்ற மிகப்பழமையான புத்தகத்தில், சங்கரரின் பிறப்பைக் குறித்த ஸ்லோகத்தில், கடபயாதி சங்கியை என்ற கணக்கிடும் முறைப்படி, வருடத்தைத் தெளிவாகவே கொடுத்திருக்கிறது. கலியுகம் பிறந்தது கி.மு 3102 என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்தே இல்லை. அது, பாரதத்திலேயே  மிகத் தெளிவாகவே கொடுத்திருக்கும் ஒரு எண். கலி பிறந்து 2593 வருடங்கள் கழித்து சங்கரர் பிறந்தார் என்று பிராசீன சங்கர விஜயம் சொல்கிறது. அப்படியென்றால், கி.மு 509 .

அடுத்த ஆதாரம்,  இன்னமும் சற்றே பழமையான ஒரு விஷயத்தைப் பார்க்கிறது. இந்திய சரித்திரம் ஆரம்பிக்கும் புள்ளி எது என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் கருதும் ஒரு விஷயம், மெகஸ்தனிஸ் இந்தியா வந்த காலகட்டம். கிரேக்கத் தத்துவ ஆராய்ச்சியாளர் மெகஸ்தனிஸ், சரித்திர காலத்தில் இந்தியா வந்து, அவரது அனுபவங்களை, 'இண்டிகா' என்ற ஒரு புத்தகத்தில் எழுதினார். இந்தப் புத்தகத்தில், இந்தியாவில் ஆட்சிபுரிந்து வந்த அரசனைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்திய சரித்திரத்தைப் பற்றிய முதல் குறிப்பு. மெகஸ்தனிஸ் குறிப்புகளின்படி, அந்தக் காலத்தில்  ஆட்சி புரிந்துகொண்டிருந்த இந்திய மன்னனின் பெயர், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' யார் என்று தெரிந்துவிட்டால், அந்த மன்னனின் காலத்தையும் கண்டுபிடித்துவிடலாம். அதனைத் தொடர்ந்து, இந்திய சரித்திரத்தின் பல்வேறு முக்கியக் காலகட்டங்களையும் எளிதில் புரிந்துகொண்டுவிடலாம்.  எனவே, 'ஸான்ட்ரகோட்டஸ்' யார் என்பதில்தான் புதிரே இருக்கிறது. அதேபோல், மெகஸ்தனிஸ், இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற மன்னனின் தந்தைக்குப் பெயர் ஸான்ட்ரமஸ் (Xandrames)  என்றும், 'ஸான்ட்ரகோட்டஸ்' மன்னனின் மகனுக்குப் பெயர், ஸான்ட்ரகிப்டஸ் (Sandrocyptus) என்றும் சொல்லியிருக்கிறார்.

பெரும்பான்மையான சரித்திர ஆராய்ச்சியாளர்கள், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னன், சந்திரகுப்த மௌரியன் என்று குறிப்பிட்டு, அவனது காலம், கி.மு நான்காம் நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில், மெகஸ்தனிஸின் காலம், கி.மு நான்காம் நூற்றாண்டு என்று மிக உறுதியாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே, மெகஸ்தனிஸ் இந்தியா வந்து விவரித்து எழுதிய 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற மன்னன், சந்திரகுப்த மௌரியன்தான். அவனது காலமும், கி.மு நான்காம் நூற்றாண்டுதான் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஏகோபித்த முடிபு.

எனவே, சந்த்ரகுப்த மௌரியனின் காலம் தெரிந்துவிட்டது. புராண, இதிகாசங்களில் கொடுத்துள்ள அரசர்களின் வரிசையும் தெரியும். ஆகவே,  சந்த்ரகுப்தனுக்குப் பின் வந்த அவனது பேரனான அசோகர், அதற்குப்பின் வந்த வம்சமான சுங்க வம்சம் என்று கணக்கெடுத்து, எல்லாருக்கும் தகுந்த வருடங்களை ஒதுக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த வரிசைப்படி பார்த்தால், சங்கரரின் காலம், கி.பி 788 என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் . . .

இங்குதான் ஒரு பெரிய பிரச்னை.  இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' என்பவன், சந்த்ரகுப்த மௌரியன் தானா? என்று கேள்வி ஒன்றை நாம் எழுப்பினால், அது அவன் தான்  என்பதற்கு ஆதாரம் பெரியதாக ஒன்றுமில்லை என்றே தெரிகிறது. 'ஸான்ட்ரகோட்டஸ்' - சந்த்ரகுப்தன் ஆகிய பெயர்களில் உள்ள ஒற்றுமையே இந்த முடிவுக்குக் காரணம்.

அப்படியென்றால், நமது வாதத்தின்படி, 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற அரசன், சந்த்ரகுப்த மௌரியன் இல்லையென்றால், பின் அவன் யார்?

சரித்திரத்தை சற்றே புரட்டிப் பார்த்தால், சந்த்ரகுப்தன் என்ற பெயரில் இன்னும் சிலர் ஆட்சி புரிந்தது நமக்குத் தெரியவரும். மௌரிய வம்சத்தில் ஒரு சந்த்ரகுப்தன் இருந்ததுபோலவே, குப்த வம்சத்திலும் இரண்டு சந்த்ரகுப்தர்கள் இருந்திருக்கிறார்கள்.  நமது வாதம் என்ன என்றால், 'ஸான்ட்ரகோட்டஸ்',  ஏன்  குப்த வம்சத்து சந்த்ரகுப்தர்களில் ஒருவனாக இருந்திருக்கக்கூடாது என்பதே!

இந்த குப்த வம்சம் மற்றும் மௌரிய வம்சத்தின் தற்போதைய சரித்திரம் சொல்லும் காலம் எது என்றால்:

மௌரிய சந்த்ரகுப்தன்: கி.மு நான்காம் நுற்றாண்டு
குப்த சந்த்ரகுப்தன்        : கி.பி நான்காம் நூற்றாண்டு

இந்த இரு அரசர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனியுங்கள். ஏறத்தாழ 800 வருடங்கள் வருகிறதல்லவா? இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், இந்தச் சரித்திரக் குறிப்புகளை வெளியிட்டது, ஆங்கிலேய அரசில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற மனிதர். இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இன்னொரு விஷயத்தைப் பார்க்கலாம்.

நமது புராணங்களை எடுத்துக்கொண்டால், பல்வேறு புராணங்களிலும், மகாபாரத யுத்தம் முடிவடைந்த வருடத்திலிருந்து, மகத நாட்டை ஆண்ட வம்சங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அத்தனை புராணங்களிலும், ஒரே வகையான பட்டியலே கொடுக்கப்பட்டுள்ளது. வேறுபாடே இல்லை. மகாபாரதத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி, யுதிஷ்டிரர் அரசாண்ட காலத்தில், கலியுகம் பிறந்தது. அது - கி.மு 3102 . இது மிக உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். யுதிஷ்டிரர் அரசாண்ட காலத்திலிருந்து, எந்தெந்த வம்சங்கள் மகதத்தை ஆண்டுள்ளன என்று இப்போது பார்க்கலாம். (இந்த வருடங்கள், கி.மு 3139  -3138 ல் இருந்து, கி.மு 328 - 327 வரை. இந்தப் பட்டியல், வாயு புராணம், பவிஷ்ய புராணம், கலியுக ராஜ வ்ருத்தாந்தம், ப்ரிஹத் கதா, மகாவம்சம், அசோகவதனா ஆகிய பல புராண நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. அத்தனையிலும் ஒரே வகையான செய்திகளே உள்ளன. புராணங்களில் கொடுக்கப்பட்ட இந்தச் செய்திகள் தவிர, நம்மிடம் வேறு ஆதாரங்கள் இல்லை)


1 . பார்ஹத்ரத வம்சம் - 1006 வருடங்கள்
2. . பிரத்யோத வம்சம் - 138 வருடங்கள்
3. சிசுநாக வம்சம் - 360 வருடங்கள்
4 . நந்த வம்சம் - 100 வருடங்கள்
5 . மௌரிய வம்சம் - 316  வருடங்கள்
6 . சுங்க வம்சம் - 300௦௦ வருடங்கள்
7. காண்வ வம்சம் - 98 வருடங்கள்
8. ஆந்த்ர வம்சம் - 456 .5 வருடங்கள்

ஆகமொத்தம், யுதிஷ்டிரரின் காலத்தில் இருந்து, ஆந்த்ர வம்சம் வரை, 2771 வருடங்கள் கழிந்துவிட்டன. கி.மு 3139 ல் இருந்து கி.மு 368 வரை.   இந்தப் பட்டியலின்படி கணக்கிட்டால், மௌரிய வம்சம், கி.மு 1534 ல் இருந்து, கி.மு 1218 வரை ஆட்சியில் இருந்துள்ளது (நீங்களே கணக்கும் போட்டுப் பார்க்கலாம்). இந்த 316 வருடங்களில், சந்த்ரகுப்தன் ஆட்சிபுரிந்தது, கி.மு 1534 ல் இருந்து, கி.மு 1522 வரையிலான பனிரண்டு வருடங்கள். இவையத்தனையும் சும்மா கொடுக்கப்பட்ட செய்திகள் அல்ல. அத்தனைக்கும் பலமான ஆதாரங்கள் உண்டு.

சரி. இப்போது, ஒரு மிக எளிமையான விஷயத்தைப் பார்க்கலாம். நாம் மேலே பார்த்த பட்டியலில், கி.மு 1534 ல் ஆட்சி புரிந்த சந்த்ரகுப்த மௌரியன், மெகஸ்தனிஸின் காலமான கி.மு நான்காம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்க முடியும்? இரண்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 1100 வருட இடைவெளி இருக்கிறதே?

இதுதான் ஆதாரமான கேள்வி.

மௌரிய கால சந்த்ரகுப்தனைப்போலவே, குப்தர்களின் காலத்தில் இரண்டு சந்த்ரகுப்தர்கள் உண்டு என்றும் மேலே படித்தோமல்லவா? ஆந்த்ர வம்சம் ஆட்சியிலிருந்து இறங்கியபின், ஆட்சிக்கு வந்தது, குப்த வம்சம். அதனை ஸ்தாபித்தது, சந்த்ரகுப்தன் என்ற மன்னன். இந்த மன்னனின் காலம், நமது கணக்குப்படி, கி.மு நான்காம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்த மன்னனுக்குப் பிறந்த மகனுக்குப் பெயர், சமுத்ரகுப்தன். இந்தச் சமுத்ரகுப்தனின் மகனுக்குப் பெயர், சந்த்ரகுப்தன் (இரண்டாம் சந்த்ரகுப்தன்). எனவே, சமுத்ரகுப்தனும், அவனது மகன் இரண்டாம் சந்த்ரகுப்தனுமே, நமது கணக்குப்படி மெகஸ்தனிஸின் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இந்தச் சமுத்ரகுப்தனைத்தான், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்று மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறார். இவனது தந்தை (முதலாம்) சந்த்ரகுப்தனைத்தான் ஸான்ட்ரமஸ் என்றும், இவனது மகனான (இரண்டாம்) சந்த்ரகுப்தனைத்தான்  ஸான்ட்ரகிப்டஸ் என்றும் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறார் என்பது  புலப்பட்டுவிடும்.

மெகஸ்தனிஸின் காலத்தில் இருந்தது சந்த்ரகுப்த மௌரியன் என்று 'கண்டுபிடித்த' சர். வில்லியம் ஜோன்சைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே படிக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால், அவருடைய நோக்கமே, இந்தியர்களின் மனதில் வேற்றுமையை விதைப்பதில்தான் இருந்தது என்றே நமக்குக் கிடைக்கும் பல ஆதாரங்கள் சொல்கின்றன.

எனவே, நான் மேலே கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், மெகஸ்தனிஸின் காலத்தில் இருந்தது, குப்த வம்ச சந்த்ரகுப்தன் என்று புரிகிறது. இவனுக்கும் ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தவன் தான் மௌரிய வம்ச சந்த்ரகுப்தன் என்றும் நமது காலக்கணக்கு அடிப்படையில் புரிகிறது.

இதுதான் உண்மையான இந்திய சரித்திரக் கணக்கு. மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள புராண அடிப்படையில்.

புத்தரின் காலம்

புத்தர் இருந்தது, மௌரிய வம்ச பிம்பிசாரனின் காலத்தில். அதாவது, பிம்பிசாரன் வாழ்ந்தது, நம்முடைய கணக்குப்படி, கி.மு 1800-1700. இது எப்படி நம்மால் சொல்லமுடிகிறது என்றால், மேலே நமது பட்டியலின்படி, மௌரிய வம்சத்துக்கு முன்னால் இருந்தது அவனுடைய வம்சம். புத்தர் பிம்பிசாரனுடைய காலத்தவர் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம். ஆகவே, புத்தரின் காலம், கி.மு 1800-1700 என்று ஆகிறது. தற்காலக் கணக்குப்படி புத்தரின் காலம், கி.மு 5ம் நூற்றாண்டு. இது தவறு. அதற்கு ஆயிரத்தைந்நூறு வருடங்கலுக்கு முன்னர் புத்தர் வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. 


எனவே, புத்தரின் காலத்துக்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழித்து, கி.மு 509ல் பிறந்தார் ஆதிசங்கரர் என்பதுதான் நாம் சொல்லவரும் விஷயம். இதற்கு இன்னமும் பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புரி, பதரி மற்றும் காஞ்சி ஆகிய மடங்களில் உள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதிலேயே கி.மு 488ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களின் முழுப்பட்டியலும் உண்டு. இந்த மூன்று மடங்களுமே, கி.மு 509ஐத்தான் ஆதரிக்கவும் செய்கின்றன. ஸ்ருங்கேரி மடம் மட்டுமே கி.பி 788ஐ ஆதரிக்கிறது. ஆனால், அவர்களிடத்தில் உள்ள பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன (அதில் உள்ள பல சங்கராச்சாரியார்கள், முன்னூறு நானூறு வருடங்களுக்கு உயிர்வாழ்ந்தவர்களாக இருக்கும்). மட்டுமல்லாது, குடாலி என்ற, ஸ்ருங்கேரிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் சங்கரர் ஸ்தாபித்த மடம் என்றும், இந்த ஸ்ருங்கேரி மடமே அதற்குப்பின் உருவானதுதான் என்பதற்கும் ஆணித்தரமான சாட்சிகள் உண்டு. 


ஆகவே, இதுதான் ஆதிசங்கரரின் காலத்தைப் பற்றிய நமது வாதம். 


உதவிபுரிந்த நூல்கள் மற்றும் இணையதளங்கள்:


1. தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி
2. Kota Venkatachalam - Age of Adi Sankara 
3. http://janamejayan.wordpress.com/category/date-of-adi-sankara/


மீண்டுமொரு கட்டுரையில் உங்களைச் சந்திக்கிறேன். இதுகுறித்து என்ன விஷயமாக இருந்தாலும், பின்னூட்டமிடுங்கள். ஆரோக்கியமான வாதம் புரிவோம்.



Thursday, March 31, 2011

தமிழகத்தில் ஒரு பழங்கால மம்மி


பண்டையகாலத்தில், எகிப்தில், இறந்த அரசகுடும்பத்தினரின் உடல்களைப் பாடம் செய்து, பிரமிடுகளில் புதைத்து வைப்பது வழக்கம் என்று பல புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். இப்படிச் செய்ததன் நோக்கம், கடவுள்களாகக் கருதப்பட்ட மன்னர்கள், மீண்டும் சொர்க்கத்திலிருந்து திரும்ப வருகையில், அவர்களுடைய பழைய உடைமைகளைத் திரும்ப உபயோகித்துக்கொள்ளலாம் என்பதே (இதன் காரணமாக, சில சமயம், அரசர்களின் வேலைக்காரர்களும் மனைவிகளும், மம்மிகளுடனே புதைக்கப்பட்டது ஒரு சோக வரலாறு). மிகச்சில நாகரீகங்களில் மட்டுமே இந்தப் பாடம் செய்து புதைக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படியிருக்க, நமது இந்தியாவிலும் ஒருசில மம்மிகள் இருக்கின்றன என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

புனித தாமஸ் பற்றி இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஏசுபிரானின் பிரதம சீடர்களுள் ஒருவராக இருந்த தாமஸ், கி.பி ஐம்பத்திரண்டில் இந்தியா வந்து, சென்னையில் ஒரு தேவாலயத்தைக் கட்ட, அவரது புகழ் பரவுவதை விரும்பாத சில விஷமிகளால், ஈட்டியால் குத்தப்பட்டு கி.பி எழுபத்திரண்டில் மரணமடைந்தார். மரணமடைந்த இடமே, புனித தாமஸ் மலை (செய்ன்ட்  தாமஸ் மௌன்ட்) என்று அழைக்கப்படுகிறது.  அவரது உடல், சான்தொமேயில் உள்ள செய்ன்ட் தாமஸ் பஸிலிகாவில் புதைக்கப்பட்டது. இந்த இடத்தில், அவரே கட்டிய ஒரு தேவாலயத்தில்தான் முதலில் புதைக்கப்பட்டது அவரது உடல். அதன்பின், அந்த இடத்தில், செய்ன்ட் தாமஸ் பஸிலிகா கட்டப்பட்டது.

நான் சொல்லப்போகும்  விஷயத்தைப் பற்றிச் சொல்லுமுன், அதையொத்த இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றே புனித தாமஸ் பற்றிச் சொன்னேன். இனி, நாம் வேறொரு விஷயத்துக்குச் செல்லலாம்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகான், ராமானுஜர். வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,  பல விஷயங்களை நிறுவியவர். இன்றும், அவையத்தனையும் அப்படியப்படியே பின்பற்றப்படுகின்றன. வைஷ்ணவத்தின் மிக முக்கிய நபராக இவரைச் சொல்லலாம். இவரது பங்களிப்பே, விஷிஷ்டாத்வைதம் என்ற தத்துவம். இவரது காலம் வரை, அத்வைதமே சனாதன தர்மத்தின் முக்கியக் கோட்பாடாக நிலவி வந்தது. ஆதி சங்கரர்,  ஸ்தாபித்திருந்த தத்துவமான அத்வைதம்,  அவரது காலத்துக்குப் பிறகு, ஆயிரத்தைந்நூறு வருடங்களாக மிகப் பிரபலமாக விளங்கி வந்தது (ஆம். ஆதி சங்கரர்  பிறந்த வருடம், கி.மு 509 என்பது எனது கருத்து. பல்வேறு நபர்களால் சொல்லப்படுவது போல, அது கி.பி 788 அல்ல. இதனைப்பற்றி ஒரு கட்டுரை சீக்கிரம் எழுதுவேன்). ராமானுஜர், அத்வைதத்தைப் பற்றிப் பல கேள்விகள் எழுப்பி, ஸ்தாபித்த ஒரு தத்துவமே இந்த விஷிஷ்டாத்வைதம். (இதற்குப் பிறகு, மத்வாச்சாரியரால் த்வைதம் பிரபலமாக்கப்பட்டது). அதுமட்டுமல்லாது,  ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதபரமான பிரம்ம சூத்ர பாஷ்யம், மிகப்பிரபலமானது (ஸ்ரீபாஷ்யம் என்றே இதற்குப் பெயர் உண்டு).  ராமானுஜர் செய்த பல்வேறு அதிசயங்களைப் பற்றியும் பல கதைகள் நிலவிவருகின்றன. இவர், 120 வருடங்கள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது (கி.பி 1017  முதல் 1137  வரை).

ராமானுஜரின் வாழ்வில் நடந்த ஒரு விஷயம், கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும். திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் பலமுறை சென்று, அவரது பதினெட்டாம் வருகைக்குப் பின், 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்த்ரத்தின் அர்த்தத்தை ,நம்பி, ராமாநுஜரிடம் சொல்ல, உடனே கோயில் கூரையின் மீது ஏறிய ராமானுஜர், அத்தனை மக்களுக்கும் அந்த அர்த்தத்தை சொல்லி, தன்னைத் திட்டிய நம்பியிடம், தான் ஒருவன் நரகத்துக்குச் சென்றால் பரவாயில்லை; இந்த அத்தனை மக்களும் சொர்க்கத்துக்குச் செல்வதே மேல் என்று வாதிட்ட கதை. அதேபோல், யமுனாசார்யரைச் சந்தித்து அவரது அருளைப் பெறப்போன ராமானுஜர், அதற்குச் சற்றுமுன்னர்தான் மோட்சமடைந்த அவரது  கையின் மூன்று விரல்கள் மட்டும் விரிந்திருப்பதைப் பார்த்து, அதற்கு அர்த்தத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல, அந்த விரல்கள் மடங்கிய கதையும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யமுனாசார்யரின் அந்த மூன்று ஆசைகளாவன:

1 . வியாசர் மற்றும் சடகோபரின் பெயர்களை, உலகம் உள்ளமட்டும் பரப்புவது
2 . ப்ரம்மசூத்ரத்துக்கு, விசிஷ்டாத்வைதபரமான பாஷ்யம் எழுதுவது
3 . சரணாகதி தத்துவமே மோட்சத்துக்கான பாதை என்பதை உலகில் பரப்புவது


இந்த மூன்று விஷயங்களையும் செய்துமுடித்தார் ராமானுஜர்.

ராமானுஜருக்கு, அவரது காலத்தில் வாழ்ந்துவந்த குலோத்துங்க சோழனால் ஆபத்து வந்தது என்று சொல்லப்படுகிறது. பரமசைவனான சோழன், வைஷ்ணவரான ராமானுஜரைக் கொல்லத் திட்டமிட, அங்கிருந்து கர்நாடகம் சென்ற ராமானுஜர், அரசன் பிட்டிதேவனின் மகளுக்குப் பிடித்திருந்த பேயை விரட்டியதால், ஜைனனான பிட்டிதேவன், தனது பெயரை, விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக்கொண்டு வைஷ்ணவனாக மாறினான். இதுபோன்ற பல அதிசயங்களை அவரது காலத்தில் ராமானுஜர் நிகழ்த்தினார். இதன்பின் ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், கோயிலின் நிர்வாகத்தைப் பல வருடங்கள் திறம்பட ஆற்றினார்.


இப்போதுதான் இந்தக் கட்டுரையின் முக்கியமான விஷயம் வருகிறது.


ராமானுஜர், தனது நூற்றிஇருபதாம் வயதில் முக்தியடைய, அவரது உடல், ஸ்ரீரங்கம் கோவிலிலேயே புதைக்கப்பட்டது. அந்த இடத்தில், அவரது சிலை ஒன்று தானாகவே எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி எழுந்த அந்தச் சிலை,  அச்சு அசலாக, ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே இருப்பதை, இன்றும் காணமுடியும். அமர்ந்தகோலத்தில், ஆளுயரத்தில் இருக்கும் அந்தச் சிலை, ஒரு கையை ஆசி கூறும் வகையில் வைத்திருக்கிறது. இன்னொரு கையை, பத்மாசனத்தில் இருக்கும் தனது தொடையின்மேல் வைத்திருக்கிறது. அந்தக் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகரிடம், பல வருடங்களுக்கு முந்தைய எனது இந்தியப்பயணத்தின்போது பேச்சுக்கொடுத்தேன். அப்போது அவர் கூறிய விஷயம், மிகவும் அதிசயமானது. இந்தச் சிலைக்கு, வருடத்துக்கு இருமுறை, கற்பூரப்பூச்சு நடக்கும் என்றும், அந்தச் சமயத்தில், சிலையைத் தொட நேரும்போது, அப்படியே ஒரு மனிதஉடலைத்  தொடுவதுபோலவேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்து என்னவெனில், ராமானுஜரின் திருவுடலைத்தான் அந்தச் சிலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதே. ராமானுஜரின் உடலேதான் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானால், அது ஒரு மம்மியாகிறது. இந்திய வரலாற்றில், இறந்த உடல் ஒன்றை இப்படிப் பதப்படுத்தி வைத்திருப்பது அதிசயமா இல்லையா? படிக்கும் நண்பர்கள் சொல்லுங்கள்.


இந்த விஷயத்தைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் சொல்லப்படுவது போல, கற்பனைக்குதிரையின் மீது ஏறி, இன்றைக்கு சுமார் 874 வருடங்களுக்கு முன் செல்வோம்.


ஸ்ரீரங்கம் திருக்கோயில். இரவு வேளை. எங்கெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவிலே ஜெகஜோதியாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் மந்திர ஒலிகள். மறுபக்கம், பரவசமான பக்தர்களின் 'நாராயணா' கோஷம். அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகள், அரச குடும்பத்தினர் ஆகிய அனைத்து முக்கியஸ்தர்களும் ஒருபுறம் நின்றுகொண்டிருக்கின்றனர். அனைவரின் முகத்திலும் சோகம் குடிகொண்டிருக்கிறது. அவர்களுக்கு முன்னர், எம்பெருமானார் யதிராஜர் ராமானுஜரின் திருவுடல் கிடத்தப்பட்டிருக்கிறது. உடலின் பொலிவு, இன்னமும் அடங்கவில்லை. உடலெங்கும் திருமண் தடவப்பட்டு,  ராமானுஜர் உறங்கிக்கொண்டிருப்பதைப் போலவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. சிறிதுநேரம் அனைவரும் கூடிப்பேசியபின், மெதுவாக சிலர் முன்வர, புருஷசூக்தமும், நாராயணசூக்தமும் அனைவராலும் பலத்த குரலில் ஓதப்படுகின்றன. ராமானுஜரின் உடலை, மெதுவாக எடுத்து,  பெருமாளின் வசந்தமண்டபம் இருக்கும் இடத்தில் தோண்டப்பட்டுள்ள குழியில், இறக்குகின்றனர்.  அனைத்து பக்தர்களின் பரவசமான 'நாராயணா' கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கிறது. மெதுவே, அந்தக் குழி மூடப்படுகிறது.


ஒரு திரைப்படத்தின் அட்டகாசமான முதல் ஐந்து நிமிடங்கள், மேலே சொல்லப்பட்ட விஷயத்தில் இருக்கிறது. உண்மையில், ராமானுஜரின் உடல், புதைக்கப்படவில்லை; அதுதான் பதப்படுத்தப்பட்டு,  சிலையைப்போல உட்காரவைக்கப்பட்டிருக்கிறது என்பதே கோயில் அர்ச்சகர் தெரிவித்த உண்மை.


ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் நண்பர்கள், உடையவர் சந்நிதி என்று அழைக்கப்படும் ராமானுஜரின் சந்நிதிக்குச் சென்று பார்க்க வேண்டுகிறேன். அச்சு அசல், ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே விளங்கும் அந்தச் சிலையின் தத்ரூபத்துக்கு இணையே சொல்ல முடியாது. ஆஜானுபாகுவான தோற்றத்தில், பிரகாசமாகப் பளிச்சிடும் கண்களின் உயிர்ப்பு, அட்டகாசம். பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தாலும், அக்காட்சி எனது மனதை விட்டு அகலவில்லை.


ஆகையால், இந்தக் கட்டுரை இத்தோடு முடிவடைகிறது. மீண்டும் ஓரிரு நாட்களில், இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.  
 
பின்குறிப்பு - புகைப்படம் - http://www.ramanuja.org/sv/temples/srirangam/ramanuja-image.html என்ற சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டது
 

Tuesday, March 29, 2011

த்வைதம் - எதுவரை?





மயஸ்கரன் என்ற பெயர்,  ருத்ரத்தின் எட்டாம் அனுவாகத்தில், சிவனின் தனிப்பட்ட பெயர்களைச் சொல்லிக்கொண்டுபோகும்போது வரும் பெயர். இந்த எட்டாம் அனுவாகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதில்தான், பஞ்சாட்சர மந்த்ரமாகிய 'நம சிவாய' என்பது வருகிறது. அதிலும், இந்தப் பஞ்சாட்சர மந்த்ரத்துக்கு நேர் முன்னால் வரும் பெயர் இது.  'மயஸ்கரன்' என்ற பெயருக்கு, விடுதலையளிப்பவன் என்பது பொருள். அந்தப் பொருளைத்தான் இந்த வலைப்பூவின் பொருளாக வைத்திருக்கிறேன்.  இனியும், ஆன்மீகத்தைப் பற்றிய எனது கருத்துகள், இந்த வலைப்பூவில் இடம்பெறும். ஆன்மீகம் என்றவுடன், அது, சில ஆன்மீகவாதிகள் செய்வதுபோல, மற்ற மதங்களையும் மக்களையும் பழித்து,  சார்பு நிலையுடைய கருத்துக்களையே விடாமல் சொல்லிவரும் என்று எண்ணிவிட வேண்டாம். இந்த வலைப்பூவில், திறந்த மனதுடைய கருத்துக்களே இடம்பெறும். எவர் மனமும் புண்படாது.  எனவே, வாருங்கள். . மிகப் பிரம்மாண்டமான சமுத்திரமாகிய ஆன்மீகத்தில் முழுகி, அந்தச் சமுத்திரத்தினுள் அடங்கியிருக்கும் எண்ணிறந்த ரகசியங்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.


என்னைப்பற்றி . . மிகச்சிறுவயதுமுதலே ஆன்மீகத்தில் இறங்கி, அதன் கரையில் இருக்கும் சிப்பிகளையும், முத்துகளையும் மட்டுமே எடுத்துப் பார்த்திருக்கும் சிறுவன் நான். எனக்கு முன்னர், கருநீல நிறத்தில், தனது எண்ணற்ற அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பெரும் சமுத்திரமான ஆன்மீகம், ஒரு பெரும் ராட்சஸ ஜந்துவைப்போல் ஆர்ப்பரித்துக்கொண்டு, அருகில் நெருங்குபர்களைக் கபளீகரம் செய்துவிடும் முடிவோடு எல்லையே இல்லாமல் விளங்குகிறது.  இச்சமுத்திரமாகிய ஆன்மீகத்தின் அலைகளின் மிகச்சிறு துளிகள், என்மீது அவ்வப்போது தெளித்ததுண்டு.  இப்படித் தெளிக்கப்பட்டதனாலேயே, அந்தச் சமுத்திரத்தில் குதித்து, அந்தச் சமுத்திரமாகவே ஆகிவிடும் நிலையை எதிர்பார்த்து, கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். எப்போது அது நடக்குமோ தெரியாது.
  
முதல் கட்டுரையாக நான் எழுத எண்ணியிருக்கும் விஷயம், அத்வைதம் பற்றியது. இந்து மதத்தின் மூன்று கோட்பாடுகளில் ஒன்றாக விளங்கும் விஷயம். மற்ற இரண்டு கோட்பாடுகள், விஷிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம். இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்; த்வைதம் என்பதற்குப் பொருள்: 'இரண்டு' என்பது. சமஸ்கிருதத்தில், 'தவி' என்ற சொல்லுக்குப் பொருள், 'இரண்டு' என்பதாகும். எனவே, அதனையொற்றி, த்வைதம் என்ற சொல்லுக்கும், இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது. பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது, கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதே த்வைதம் என்ற கோட்பாடு சொல்லும் உண்மை. அதாவது, பரமாத்மா என்ற கடவுளை, ஜீவாத்மா என்ற அவனால் படைக்கப்பட்ட உயிர், பக்தி செய்துகொண்டேதான் இருக்கவேண்டும் என்று த்வைதம் சொல்கிறது.


சரி. இதில் என்ன தவறு? கடவுளை எண்ணியெண்ணி உருகுவதுதனே முறை? கடவுள் என்று ஒருவர் இருக்கையில், அவரைப் பக்தி செய்துகொண்டே இருக்கும் மனிதனும் இருக்கத்தானே வேண்டும்? இப்படியொரு கேள்வி எழுகிறதல்லவா? த்வைதக் கோட்பாடு தவறேயில்லை என்பதுதான் நான் சொல்வதும். த்வைதமும் இருக்கத்தான் வேண்டும். ஆனால், த்வைதமே எப்பொழுதும் கூடாது என்பதே நான் சொல்லவரும் விஷயம். அதாவது, ஒரு மனிதன், கடவுளை பக்தி செய்யும் ஆரம்ப காலத்தில், கட்டாயம் த்வைதம் வேண்டும்.  யோசித்துப் பாருங்கள்: 'கடவுளும் நானும் ஒன்று. எனவே, என்னையே நான் எப்படிக் கும்பிடுவது? ஆகையால், பக்தியே எனக்குத் தேவையில்லை' என்று விபரீதமாக ஒரு மனிதன் சிந்திப்பதற்கே, த்வைதமே வேண்டாம் என்ற நிலை வழிசெய்யும். எனவே, தொடக்க நிலையில், 'கடவுளும் நானும் வேறு; அவனாகவே நான் ஆவதற்கு, முதலில், அவனை எண்ணிப் பக்தி செய்யும் நிலை வேண்டும்; பக்தியில் நமது மனம் கரைந்து, முடிவில் அவனாகவே நாம் மாறிவிடும் அத்வைத நிலை சித்திக்கும்; அதுவரை, த்வைத நிலையாகிய கடவுளும் நானும் வேறு என்ற எண்ணத்திலேயே வழிபட்டு வர வேண்டும்' என்றே ஒரு மனிதன் தனது இன்னிங்க்ஸை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் முறையும் கூட.


என்னடா இந்த ஆள் அத்வைதம் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு த்வைதத்தைப் பற்றியே அளந்துகொண்டிருக்கிறானே என்று தோன்றுகிறதா? அத்வைதம் என்ற முடிவுநிலை, த்வைதம் என்ற ஆரம்ப நிலையின் மூலமாகவே சித்திக்கிறது. எனவே, ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு, அவசியம் த்வைதம் தேவை.
  
அத்வைதம் - அதாவது, அ - த்வைதம் என்றால், இரண்டு இல்லை என்பது பொருள். அதாவது, ஜீவாத்மா பரமாத்மா என்ற வேறுபாடு இல்லை என்பது இங்கே பொருளாகிறது. மற்ற சித்தாந்தங்கள், கடவுள் என்று ஒருவன், சொர்க்கம் என்ற ஒரு இடத்திலோ, அல்லது அவனுக்கென்று இருக்கும் ஒரு இருப்பிடத்திலோ இருக்கிறான் எனவும், இறப்புக்குப் பின், அந்த இடத்துக்கு நாம் சென்று, அவனை வழிபட்டுக்கொண்டே இருப்போம் என்றும் வலியுறுத்த, அத்வைதமோ, ஒரே போடாக, இறந்தபின்தான் மோட்சம் என்பது இல்லை என்றும்,  உயிரோடு இருக்கும்போதே மோட்சத்தை அடைய முடியும் என்றும் சொல்லிவிடுகிறது. எப்போது ஒருவன், தானும் கடவுளும் வேறல்ல என்னும் உண்மையை அனுபவபூர்வமாக புரிந்துகொண்டுவிடுகிறானோ, அப்போதே அவன் மோட்சத்தை அடைந்துவிடுகிறான் என்பதே அத்வைதம் சொல்லும் உண்மை.  இங்கே, அனுபவபூர்வமாக என்பது முக்கியமான வார்த்தை. யார்வேண்டுமானாலும் மிக எளிதில் சொல்லிவிடலாம் - கடவுளும் நானும் ஒன்றுதான் என்பதை. ஆனால், அதை அனுபவத்தில் உணர்ந்தாயா என்றே அத்வைதம் கேள்வி கேட்கிறது. நாம் ஒரு வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலை, நாம் இன்ன இன்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாமும் அவற்றைச் செய்துவிட்டு, அந்த வேலையை நமது பெயரோடு போட்டுக்கொள்கிறோம் - என்ஜினியர் என்றோ மருத்துவர் என்றோ அல்லது இன்னும் அவற்றைப்போலவே இருக்கும் பல்வேறு தொழில்களாகவோ.  அந்த வேலையைச் செய்யாத ஒருவன் - வெளியிலிருந்து அந்த வேலை செய்பவர்களை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மனிதன் - நானும் ஒரு மருத்துவர்தான் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும்? அவன் ஒரு பைத்தியம் என்று ஊர் முடிவுகட்டிவிடுமல்லவா? (இப்பொழுது இது சகஜமாக நடந்துகொண்டுதானிருக்கிறது என்பதை விட்டுவிடுவோம்). அதைப்போல்தான், அத்வைதம் என்ற நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே அவன் ஞானி. சும்மா வாய்வார்த்தைகளால் அளந்துகொண்டு திரிந்தால் அவன் ஒரு ஆஷாடபூதி என்றே அர்த்தம்.


கடவுளும் நானும் ஒன்று என்ற அத்வைத நிலை சித்திக்கும் ஒரு மனிதன், மோட்சத்தை அடைந்துவிடுகிறான். மோட்ச நிலை என்பது வேறொன்றுமில்லை - தெளிந்த அத்வைத ஞானம் என்பது, இறைவன் என்று நாம் சொல்லும் பிரம்மத்தின் நிலையான ஆனந்தமே. எப்பொழுதும் ஆனந்தமாக இருந்துகொண்டிருக்கும் பிரம்மத்தில் தோய்ந்த நிலை அது. அந்த நிலையில் இருக்கும் அந்த மனிதன், தனக்கு இன்னமும் எவ்வளவு நாட்கள் இந்த பூமியில் வாழ  இருக்கிறதோ, அத்தனை நாட்களும் இதே நிலையில் ஆனந்தமாக வாழ்ந்துவிட்டு, உடல் மரணமடையும்போது, அவனது உயிர், பிரம்மத்திலேயே ஒன்றிவிடுகிறது. இதுதான் அத்வைதம் in a nutshell.


இந்த அத்வைத ஞானம் என்பது, டக்கென்று வந்துவிடாது என்று மறைநூல்கள் சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு, அத்வைதத்தைத் தேடிச்செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவதற்கே, பல பிறவிகள் தேவைப்படும் என்பது அவை சொல்லும் உண்மை. இதைப்பற்றி, நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பிரபல ஆன்மீகவாதி சொல்வது என்னவென்றால்: 'சில குகைகளில், சுண்ணாம்புத்தாது, சொட்டுச்சொட்டாக கூரையிலிருந்து விழும்; அப்படி விழும் தாது, தரையில் இருந்து மெதுவே வளர ஆரம்பிக்கும்; அப்படி வளரும் இந்தத்தாது, ஒரு காலகட்டத்தில், மேலே சொட்டிக்கொண்டிருக்கும் அந்த இடத்தைச் சந்திக்கும்; அப்போது ஒரு பெரிய சுண்ணாம்புத் தூணாக அது மாறும். இதற்கு ஆங்கிலத்தில் ஸ்டேலக்டைட் (Stalactite)  மற்றும் ஸ்டேலக்மைட் (Stalagmite) என்று பொருள். ஆனால், நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இப்படித் தூணாக மாறுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டம், பல கோடி வருடங்கள். இதைப்போலவே, மனிதன், இறைவனின் இயல்பு புரிந்து, அதுவாகவே தானும் ஆகவேண்டும் என்று முயற்சித்தால்,  இறைவனும், தனது அருளை மனிதனின் மேல் பொழிவார்; ஒரு காலகட்டத்தில், இந்த இரண்டு விஷயங்களும் சந்திக்கையில், அத்வைத ஞானம் கிடைக்கும். ஆனால், இதற்கும், பல்லாயிரக்கான ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை'. 


இவ்வளவு சுலபமாக நமக்குப் புரியும் வகையில் எளிய முறையில் இந்த அத்வைத தத்துவத்தை விளக்கிய அந்த ஆன்மீகவாதி, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெரிதாக எதுவும் இல்லை. சிறிது ஓய்வுக்குப்பின் மறுபடி அருள்பாலிக்க வருவார். 


இனி வரும் கட்டுரைகளில், அத்வைத தத்துவம் மட்டுமன்றி, ஆன்மீக உலகின் அதிசயங்கள், மர்மங்கள் ஆகிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். அது மட்டுமன்றி, எனது அனுபவங்களில் நான் கண்ட பல வியப்பூட்டும் விஷயங்களையும் பார்ப்போம். நாளையோ அல்லது நாளை மறுநாளோ எனது கட்டுரை வரும். அதுவரை, ஆனந்தமாக இருங்கள். வாழ்த்துகள்.