நண்பர்களே . . இன்று நாம் பார்க்கப்போகும் விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டுமே. அதேபோல், திறந்த மனதுடன் எந்த விஷயத்தையும் அணுகும் நண்பர்களும் இதனைப் படிக்கலாம். ஏனெனில், மூடிய மனதுடன், ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே வாதிடுபவர்களுக்கு, இதைப் படிப்பதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு சரி. வேறு எந்த நன்மையையும் ஏற்படாது. திறந்த மனத்துடன் இதனைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும் பின்னூட்டமாக இடலாம். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.
ஸாயிபாபா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி, உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாகவே, சாயிபாபா மீது பக்தி இருக்கும் அதே அளவுக்கு, அவதூறுகளும் மலிந்தே இருக்கின்றன என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். ஸாயிபாபா பற்றியும், அவரது தற்போதைய நிலை பற்றியும் விரிவாகப் பார்த்துவிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அவர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளையும் விரிவாகப் பார்த்துவிடலாம்.
முதலில், நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்மீகுலகில், எத்தனைக்கெத்தனை உண்மையான இறைமனிதர்கள் இருக்கின்றனரோ, அத்தனைக்கத்தனை போலிகளும் உண்டு. இந்தப் போலிகளால், உண்மையான இறைமனிதர்கள்மேலும் சந்தேக நிழல் படிகிறது. இது முதல் விஷயம்.
நமது இந்து மதத்தில், இறைமனிதர்கள் பலர் இருந்திருக்கின்றனர். புராணங்களை எடுத்துக்கொண்டால், வேத காலத்தில் வாழ்ந்த பல முனிவர்களையும், அவதாரங்களையும் பற்றி அவை விரிவாகச் சொல்லிச் செல்கின்றன. சில உதாரணங்களாக, ததீசி, மரீசி, வியாஸர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர். கண்வர் ஆகிய எல்லோருக்கும் தெரிந்த முனிவர்களை எடுத்துக்கொள்ளலாம். வேதத்தில், இந்த முனிவர்கள் அருளிச்செய்த பல மந்த்ரங்கள் உள்ளன. அந்த மந்த்ரங்களிலேயே, இன்னின்ன மந்த்ரத்துக்கு ஆசிரியர் இன்னின்ன முனிவர், இந்த மந்த்ரத்தை இன்னின்ன முறையில் உச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் முறையான வழியே வகுத்துத் தரப்பட்டுள்ளது. இந்த முனிவர்களைப் பற்றிய பல கதைகளையும், புராணங்களில் படிக்கலாம். இவர்கள், பல அதிசயங்களை விளைவித்ததாக அவை சொல்லும்.
நமக்கெல்லாம் பொதுவாக ஒரு குணம் உண்டு. நாம் வாழும் காலமாகிய தற்போது, யாராவது ஒரு சாமியார், ஏதாவது அதிசயம் நிகழ்த்திவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன், நமது மனதில் முதலில் தோன்றும் எண்ணம் என்னவென்றால், இந்த சாமியார் ஒரு போலி என்பதே. அந்த அளவு, போலிச்சாமியார்கள் மலிந்துவிட்டனர். ஆனால், அதே நேரத்தில், உண்மையான இறைசக்தி, கட்டாயம் அதிசயங்களை நிகழ்த்தும் தன்மையுடையது என்பதில் சந்தேகமேயில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இது ஏனெனில், எனது கண்கூடாக நான் அனுபவித்த பல அதிசயங்கள் உள்ளன. ஒரு காலத்தில் பகுத்தறிவாளனாக இருந்து, நான் பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். அவையத்தனைக்கும் பதிலைக் கருணையுடன் அந்த இறைவன் அளித்திருக்கிறான். அந்த அடிப்படையில், யாரோ சொல்லிக் கேட்டு அதனை எழுதாமல், எனக்கு நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே தான் நான் எழுதிவருகிறேன். நான், சென்ற பதிவில் சொல்லியுள்ளபடி, அவ்வப்போது இறைவன், இறைமனிதர்களை இந்தப் பூமியில் அவதரிக்க வைத்தே இருக்கிறான். இந்த இறைமனிதர்களால், பெரும் மாற்றங்கள் மலர்ந்திருக்கின்றன. ரமண மகர்ஷியை மறக்கவியலுமா? அவர் ஒரு போலி என்று யாராவது சொல்லமுடியுமா? பாண்டிச்சேரி அரவிந்தர்? பாரதியாருக்கே குருவாக இருந்தவர். இன்றும், பக்தர்கள் பலருக்கும் அருள்புரிந்துகொண்டிருப்பவராக இருக்கிறார். இதேபோல், இந்தியாவெங்கும் பலராலும், கடவுளின் ஸ்தானத்தில் வைத்து வழிபடப்படும் இன்னொரு தெய்வமனிதரும் இருக்கிறார். அவர்தான் ஷீர்டி ஸாயிபாபா. அவர், கட்டாயம் போலி அல்ல. ஏனெனில், அவரால் அருள் பெற்றவர்கள் இன்னமும் பலபேர். ஸ்ரீ ஸாயி சத்சரித்ரம் என்ற அவரது சரிதையைச் சற்றே புரட்டிப்பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது, கட்டாயம் ஒரு புரட்டு நூல் அல்ல. அதைப் படித்தாலே, அதன் authenticity நன்றாகப் பதியும்.
மேலே நாம் பார்த்த தெய்வமனிதர்கள் அத்தனை பேரும் தற்போது நம்மிடையே உயிரோடு இல்லை. ஆனால், நம்மிடையே உயிரோடு இருப்பவர்களில், சந்தேகமில்லாமல் தெய்வமனிதர் என்று சொல்லப்படக்கூடிய ஒருவர்தான் ஸ்ரீ ஸத்யஸாயி பாபா. இவரது பெயரை உச்சரித்தவுடனேயே, சிலரது இதழ்களில் ஒரு கேலிச்சிரிப்பைக் காண்கிறேன். அதன் காரணமும் புரிகிறது. 'இந்த மனிதர், கட்டாயம் ஒரு போலி. அவரைப்போய், தெய்வமனிதர் என்று கதைக்கிறீர்களே' என்று என்னிடம் நீங்கள் கேட்பதும் புரிகிறது. இந்தக் கேள்விக்குப் பதில், இந்தக் கட்டுரையின் வேறோரிடத்தில் வழங்கப்படும்.
அவரைப் பற்றி உலவும் குற்றச்சாட்டுகளை முதலில் பார்த்துவிடுவோம்.
முதல் குற்றச்சாட்டு, ஸாயிபாபா, தனது பக்தர்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்பது. இதனைச் சற்று விரிவாகவே பார்த்துவிடுவோம். இணையத்தை சற்றே புரட்டினால், 'ஸாயிபாபா என்னிடம் தவறாக நடந்துகொண்டார்' என்று பலரும் புலம்பியிருப்பதைக் காணமுடியும். ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது? சாயிபாபாவிடம் ஒரு வழக்கம் உண்டு. தினமும் காலையிலும் மாலையிலும், பக்தர்களிடையே வந்து, சிலரைத் தனியாகப் பேசுவதற்காக அழைத்துச் செல்வார். அவரது பக்தர்களிடையே, 'இன்டர்வ்யூ' என்று இதற்குப் பிரபலமான பெயர் உண்டு. இந்த இன்டர்வ்யூவில், தனியே அழைத்துச்சென்று, ஹோமோசெக்ஸ் தொந்திரவு கொடுத்தார் என்று அவர்களது குற்றச்சாட்டு செல்லும். இதற்குப் பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், அந்த இன்டர்வ்யூ என்பதைச் சற்று விரிவாகப் பார்த்துவிடுவோம்.
ஸாயிபாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில், மையமான பஜனை மன்றம் உண்டு. உண்மையில், இந்தக் கட்டிடத்துக்கேதான் பிரசாந்தி நிலையம் என்று பெயர். இந்தக் கட்டிடத்தின் கீழ்த்தளம் முழுமையுமாக ஆக்கிரமித்திருப்பது ஒரு பெரிய பஜனைக்கூடம். அந்த பஜனைக்கூடத்தின் மேல் மூலையில், ஒரு சிறிய அறை உண்டு. இந்த அறையின் பெயர் தான் இன்டர்வ்யூ அறை என்பது. ஸாயிபாபாவால் தேர்வு செய்யப்படும் பக்தர்கள், இந்த அறையில்தான் குழுமுவார்கள். அந்த அறையானது, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பிரிவில், ஸாயிபாபாவுக்கு ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கும். மற்ற பக்தர்களெல்லாம், அந்த நாற்காலியைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். இதிலிருந்து, குடும்பம் குடும்பமாகவோ, அல்லது தனியாக வந்திருப்பவர்களுடன் தனியாகவோ உரையாட, பாபா அந்த இன்னொரு பிரிவுக்குச் செல்வார். இரண்டு பிரிவுகளும், ஒரு மெல்லிய திரைச்சீலையால் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்தப்பக்கம் அமர்ந்திருப்பவர்களுக்கு, அந்தப் பக்கம் நடப்பது தெளிவாகத் தெரியும். அது மட்டுமல்லாமல், அந்தப் பக்கம் பெசப்படுபவைகளும் தெளிவாகக் கேட்கக்கூடியவகையில்தான் அந்த அறையின் அமைப்பும் இருக்கும். ஆகவே, அந்தப்பக்கம் பக்தர்களுடன் தனியாகப்பேசுகையில், மெல்லிய குரலில் பேசுவது பாபாவின் வழக்கம். இதுதான் பக்தர்களுடன் 'தனியாக' பாபா பேசுவதன் சாராம்சம். இப்படி பாபாவால் தேர்வு செய்யப்பட்டு அவருடன் உரையாடியவர்களின் எண்ணிக்கை, பல்லாயிரம். இவர்களில் யாருமே சொல்லாத குற்றச்சாட்டுதான், சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ஆகா, இது முற்றிலும் தவறான பொய்ப்பிரச்சாரம் என்பது கண்கூடு.
இன்னொரு விஷயம் என்னவெனில், இப்படிப் போய்ப் பேசிய பலரையும் எனக்கே நன்றாகத் தெரியும். அந்த அறைகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
இரண்டாம் குற்றச்சாட்டு, ஸாயிபாபா, கீழ்த்தரமான மேஜிக் வேலைகளைச் செய்து, பக்தர்களைக் கவர்கிறார் என்பது. இதனைப்பற்றியும் விபரமாகப் பார்ப்போம்.
நம்மால், பொருட்களை அந்தரத்தில் இருந்து வரவழைக்கமுடியும் என்ற விஷயத்தை நம்ப முடிவதில்லை. காரணம், விஞ்ஞானபூர்வமாக அது சாத்தியமே இல்லை என்று நாம் நினைப்பதே. இந்த இடத்தில், ஒரு சிறிய உதாரணம் தருகிறேன். எங்களது வீட்டுக்கு, பல வருடங்கள் முன்பு, காயத்ரி ஸ்வாமிகள் என்று அழைக்கப்படும் ஒருவர் வந்தார். எங்களுடன் பேசிக்கொண்டே, மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்தார். சட்டை அணியவில்லை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவரது உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையை வரவழைத்துக் கொடுத்தார். இத்தனைக்கும், அவர், எந்த விதமான அசைவையும் நிகழ்த்தாமல், கையை எங்கள் பார்வையில் இருந்து ஒளிக்காமல் செய்த அற்புதம் அது. அதே காயத்ரி ஸ்வாமிகள், இதைப்போலவே, எனது நண்பர் ஒருவரின் வீட்டிலும் சென்று, ஒரு பெரிய சங்கை வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். மிக மிக நெருக்கத்தில், கண் முன்னர் நடந்த அற்புதம் இது. காயத்ரி சுவாமிகளைப் பற்றி இணையத்திலோ, அல்லது புத்தகங்களிலோ தேடிப்பாருங்கள். சக்திவாய்ந்த ஒரு மகான் என்று தெரியவரும். அவர் இப்போது இல்லை.
ஸாயிபாபாவே, தனது இந்த 'மிரகிள்' என்று அழைக்கப்படும் விஷயத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். இதைப் படியுங்கள்.
"மிரகிள்கள், எனது விசிட்டிங் கார்டுகள். நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்? புதிய மனிதர் ஒருவரைப் பார்த்தால், உங்களது விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்து அறிமுகம் செய்துகொள்கிறீர்கள் அல்லவா? அதைப்போலவே, நானும், ஒரு மனிதரிடமோ அல்லது ஒரு குடும்பத்திடமோ என்னை அறிமுகம் செய்துகொள்ளப் பயன்படுத்துவதே இந்த மிரகிள்கள். இவற்றுக்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. நீங்கள் என்னிடம் வரத்துவங்கும் ஆரம்பகாலத்தில், உங்களுக்குத் தேவையானவற்றை நான் வழங்குவேன். இது எதற்கென்றால், சிறுகச்சிறுக, வருங்காலத்தில், நான் விரும்பும் பொருளை உங்களுக்குக் கொடுக்க உங்களைத் தயார்படுத்துகிறேன். நான் உங்களுக்குக் கொடுக்க விரும்பும் பொருள், நிறைவானது. அழியாதது. ஆனந்தமானது. நீங்களே கடவுள் என்ற புரிதலே அது. "
இது ஒரு பக்கம் இருக்கட்டும். வேறு பல எண்ணற்ற முறைகளில், ஒரு பக்தனிடம் பேசும்போதோ, நடக்கும்போதோ, அன்பின் மிகுதியால், பல பொருட்களைச் சிருஷ்டித்தும் அவர் தந்திருக்கிறார். சுவையான தின்பண்டங்களிளிருந்து, மோதிரம், ஜெபமாலை, விக்ரகம், சங்கிலி, பென்டன்ட், படங்கள். ஏன்? பல்செட் ஆகிய பொருட்கள், அந்தப் பட்டியலில் அடங்கும். இவை, அந்த மனிதனின்மேல் அவருக்கு இருக்கும் அன்பு, பொங்கிப்பெருகுவதன் வெளிப்பாடேயாகும். இது மட்டுமல்லாது, அந்தப் பொருட்கள், அந்த மனிதனின்பால், பாபாவின் அருளை உறுதிசெய்யும் ரட்சைகளாகவும் விளங்குகின்றன.
இந்த இடத்தில், இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். 'ரமணர் இதைப்போல் அதிசயங்கள் நிகழ்த்தவில்லையே? காஞ்சி மகாபெரியவர் இதைப்போல் பக்தர்களுக்கு எதையும் சிருஷ்டித்துத் தரவில்லையே? எனவே, சாயிபாபா ஒரு ஃபிராடு' - என்று சொல்லும் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்படிச் சொன்ன பலரும், ஏதோ ஒரு சிறிய பொருளை ஸாயிபாபா தனக்காகச் சிருஷ்டிசெய்து தந்தவுடனே, அவரது பெரும் பக்தர்களாக மாறியிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இங்கே நினைவுகொள்ளப்படவேண்டிய விஷயம் என்னவெனில்: அவதாரங்கள், பல்வேறு வகைப்படும். ரமணர் ஒரு வகை. மகாபெரியவர் ஒரு வகை. பாபா மற்றொரு வகை. ராமனையும் கிருஷ்ணனையும் சற்றே ஒப்பிட்டுப்பாருங்கள். 'நான் ஒரு சாதாரண மானிடன் மட்டுமே' என்றே சொல்லி, ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திறம்பட வாழ்ந்துகாட்டிய ராமனும், 'அர்ஜுனா. . நானே கடவுள். என்னை வழிபடு. இதோ எனது விஸ்வரூபம்' என்று சொல்லி, தனது தெய்வீகத்தை சக்திவாய்ந்தமுறையில் வெளிப்படுத்திக் காட்டிய கண்ணனும் ஒன்றுதானே? ராமன் அமைதியாக இருந்தவன். எனவே, அவன் மட்டுமே கடவுள். கண்ணன் ஒரு போலி என்றா நாம் சொல்கிறோம்? தெய்வீக மனிதர்களும், பல்வேறு வகைப்படுவார்கள் என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
மூன்றாவது விஷயம் என்னவெனில், நம்மிடையே உள்ள தப்பான ஒரு அபிப்ராயம்தான். 'சாமியார் என்றால், உடுத்த உடை கூட இல்லாமல், கிழிந்து தொங்கும் உடைதான் அணியவேண்டும்; எங்கு சென்றாலும் நடந்துதான் செல்லவேண்டும்; ஆள் அம்பு படை எதுவும் கூடாது; அப்போதுதான் நம்புவேன். சாயிபாபாவிடம் இருக்கும் சொத்து, ஏராளம். அவர், எங்கு சென்றாலும், காரில் தான் செல்கிறார். எனவே, அவர் ஒரு ஃபிராடு' என்ற நமது அபிப்பிராயத்தைத் தான் சொல்கிறேன். தன்னிடம் உள்ள இந்த விஷயங்களை, நல்லமுறையில் மட்டுமே அல்லவா அவர் பயன்படுத்துகிறார்? பணக்காரர்கள் கொண்டுவந்து கொட்டும் பணம் எல்லாமே, சமூகசேவைக்கு மட்டுமேயல்லவா பயன்படுத்தப்படுகிறது? அவரைப்போல் இரண்டு பிரம்மாண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டி, இருதய அறுவைசிகிச்சையிலிருந்து அத்தனையும் இலவசமாகவே செய்துதரும் சாமியார்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? அவரது கல்லூரிகளில், படிப்பும் முழு இலவசம். பாலைவனமாக இருந்த ராயலசீமா முழுதும் தண்ணீரை ஏற்பாடு செய்துதந்தவர் அவர். சென்னைக்கும் கிருஷ்ணா நதிநீர் ஏற்பாடு செய்தவர். அவர்மேல் அவதூறு கிளப்பும் நண்பர்கள் யாருமே, இந்த விஷயங்களைப் பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?
இப்பொழுது, பரவலாகக் கிளம்பியுள்ள நான்காவது குற்றச்சாட்டு என்னவெனில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அல்லவா? இதைவைத்துத்தான், தெய்வமாகக் கருதப்பட்ட அவரே இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். தன்னைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளாத ஒரு மனிதர், கட்டாயம் ஃபிராடுதான் என்று சிலபேர் பரப்பிவரும் அவதூறுதான்.
இதற்கு மிக எளிதான பதில் உண்டு. மறுபடியும் ரமணருக்குச் செல்வோம். ரமணரின் கடைசிக்காலத்தில், புற்றுநோயால் அவர் அவதிப்பட்டார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? ராமகிருஷ்ண பரமஹம்சருமே, புற்றுநோயால் கொடும் அவதி அனுபவித்தவரே. ஏன்? இயேசுபிரான் படாத அவதியா? சிலுவையில் அவர் உயிர்நீத்த கதை தெரியுமல்லவா? இவர்கள் அத்தனைபேரும் நினைத்திருந்தால், அந்த வியாதியையோ அல்லது அந்தக் கொடுமையையோ சட்டென்று மாற்றியிருக்கமுடியுமல்லவா? இருந்தும், அவர்கள் அதனை அனுபவித்தது, நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதனால்தான் இல்லையா? உடல் என்பது அநித்தியம். ஆன்மா மட்டுமே நித்தியமான, சத்தியமான வஸ்து என்றே ஸாயிபாபா இத்தனை நாளும் ஓயாது சொல்லிவந்தார். இப்போது, அதனைச் செயல்முறையில் காட்டுகிறார். இந்த அவதூற்றைப் பரப்புபவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 1963 ல் , ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்த பக்கவாத நிலையில், பாபா சில நாட்கள் இருந்தார். ஒரு நாள், அவரைக் கிட்டத்தட்ட தூக்கிவந்து, அமரவைத்தனர். சட்டென்று ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்த பாபா, ஒரு பெரிய உரையாற்றினார். அந்த உரை, இணையத்திலேயே கிடைக்கிறது. இங்கே படிக்கலாம். இதைப்போலவே, எழுபதுகளில், கோவாவில், குடல்வால் வெடித்த நிலையில், படு சீரியஸாக இருந்த பாபா, அடுத்த நாளே அதனைக் குணப்படுத்திய வரலாறும் பாபாவின் பக்தர்களுக்குத் தெரியும். அதைப்போலவே, இம்முறையும் இனிதே மருத்துவமனையிலிருந்து வெளிவருவார் பாபா. பொறுத்திருந்து பாருங்கள். அவரே, தனது 96 வது வயதுவரை வாழப்போவதாகப் பலமுறை சொல்லியிருக்கிறார். எனவே, பாபாவின் பக்தர்களைக் கலங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருக்கால் அவருக்கு ஏதாவது நேர்ந்தாலும்கூட, அதுவும் பக்தர்களுக்கு ஒரு படிப்பினைதான். ஆன்மாவே சத்தியம் என்ற அவரது கூற்று மெய்ப்பிக்கப்பட்ட்டதாகவே இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரை மிகப் பெரியதாக வளர்ந்துவிட்டது. இருந்தாலும், ஒருதலைப்பட்சமாக, பிடிவாதமாக, பாபா ஒரு ஃபிராடு என்று சொல்லும் நண்பர்கள், இதனைப் படிக்க நேர்ந்தால், ஓரளவு அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன். எதுவாக இருந்தாலும், நாகரீகமான முறையில் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து பேசலாம்.
ஜேய் ஸாயிராம் !